பூப்பந்து உலக வெற்றியாளர் போட்டியை வென்றிருந்த சிங்கப்பூர் வீரர் லோ கியன் இயூ பெற்றுக்கொண்டுள்ள ரொக்க வெகுமதி இப்போது கிட்டத்தட்ட $500,000ஐ எட்டியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கான கனவை நோக்கிச் செல்லும் லோவுக்கு உந்துதல் தரும் விதமாக, கரிம் ஃபேமிலி அறநிறுவனம் புதன்கிழமை (ஜனவரி 12) $200,000 வெகுமதி அளித்துள்ளது.
இந்தோனீசிய செல்வந்தர் பாத்தியார் கரிம் மற்றும் அவருடைய மனைவி தேவி சுக்வாந்தோ அந்த அறநிறுவனத்தைத் தொடங்கினர்.
ஏற்கெனவே பல்வேறு நன்கொடையாளர்கள் கூட்டு சேர்ந்து லோவுக்கு $295,000க்குமேல் நிதி வழங்கியிருந்தனர்.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி, உலக வெற்றியாளர் போட்டியை வென்ற முதல் சிங்கப்பூரர் எனும் சாதனையைப் படைத்தார் லோ, 24. ஆனால் அப்போது அவர் ரொக்க வெகுமதி எதையும் வெல்லவில்லை. காரணம், பூப்பந்து விளையாட்டில் ரொக்க வெகுமதிகளை வழங்காத இரு பெரிய நிகழ்வுகளில் ஒன்று உலக வெற்றியாளர் போட்டி.
தற்போது இந்திய பொது விருது போட்டியில் பங்குபெறும் லோ, “எனது வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு வெகுமதிகளும் உற்சாகமும் அளித்து வரும் ஆதரவாளர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, இது எங்களது கடின உழைப்பு, தியாகத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதுகிறோம்,” என்று கூறினார்.