புதிய நம்பிக்கை, புத்துணர்ச்சியோடு இன்று பொங்கல் பொங்குகிறார் முகுந்தன் முக்தி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் பண்பாட்டுத் திருநாளான பொங்கல் முகுந்தனுக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமான நாள்.
ஈராண்டுகளாக நீடித்த மனக் கவலைகள் நீங்கியதால் பொங்கல் இந்த ஆண்டு மேலும் அதிகளவு மகிழ்ச்சியை அவருக்குக் கொண்டு வந்துள்ளது.
வர்த்தகத் துறையில் பணியாற்றிய திரு முகுந்தன் முக்தி, கடந்த ஆண்டின் முற்பகுதியில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையை இழந்தார்.
எனினும் அதற்கு முன்னதாகவே திறன்மேம்பாடு செய்து தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்ற தம்மைத் தயார்படுத்திக்கொண்டதால் விரைவில் புதிய வேலைக்கு அவரால் மாற முடிந்தது.
எனினும் வாழ்க்கைத் தொழில் மாற்றத்தால் முதலில் நிதி நிலைமை சற்று ஆட்டங்கண்டது.
“புதிய துறையில் சேர்ந்தபோது மாத வருமானம் குறைந்தது. அதனால் மனக் கவலை ஏற்பட்டது. சம்பளம் இப்போது உயர்ந்துள்ளது,” என்றார் முகுந்தன்.
மன உளைச்சலால் உடல் நலமும் பாதிப்படைந்ததாகக் கூறினார் தகவல் தொழில்நுட்ப நிர்வாகியான 38 வயது முகுந்தன். ஆனால் துவண்டுவிடாமல் இருக்க சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபட்டார்.
“19 கிலோ எடையைக் குறைத்துள்ளேன்,” என்றார் மகிழ்ச்சியோடு.
“இந்த தை மாதம் எல்லாருக்கும் எல்லாவித நன்மையையும் கொண்டு வரும்,” என்று நம்பிக்கையோடு கூறினார் திரு முகுந்தன்.
இன்று வீட்டில் பொங்கல் வைத்த பின்னர் மகளோடு லிட்டில் இந்தியா பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதாகக் கூறினார்.
அங்கு மாட்டுக்குப் புல் கொடுக்கப் போவதாக சொன்னார் அதினா.
“வேலைக்கும் பள்ளிக்கும் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் குடும்பத்தோடு பொங்கல் விழாவைத் தவறாமல் கொண்டாடுவதில் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார் திரு முகுந்தன்.
தற்போதைய கிருமிப்பரவல் சூழலால் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் விதமும் மாறியிருப்பதாக திரு முகுந்தனின் மனைவியான 38 வயது திருமதி ரேவதி மோகன் தெரிவித்தார்.
“அதிக நேரம் வெளியே இருப்பது அவ்வளவு பாதுகாப்பாக இல்லை. நேரத்திலும் பொருள் வாங்குவதிலும் சிக்கனம் காட்ட வேண்டியுள்ளது,” என்றார் திருமதி ரேவதி.
தமது 64 வயது மாமியார் திருமதி தேன்மொழி நாகப்பனுடன் சேர்ந்து பொங்கலுக்கு அறுசுவை உணவு சமைத்து விருந்துண்பது வழக்கம் என்றார் அவர்.
“அம்மா செய்யும் வடை எனக்குப் பிடிக்கும்,” என்று சொன்னார் முகுந்தன் - ரேவதி தம்பதியின் ஆறு வயது மகள் அதினா இலக்கியா.
பொங்கலுக்கு திருமதி ரேவதி வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போடுவார்.
“இந்த ஆண்டு கோலம் போடுவதற்கு என் மகள் உதவி செய்வாள்,” என்றார் மகிழ்ச்சியோடு.
“கிருமிப்பரவலின் தாக்கத்தை மற்ற பல குடும்பங்கள் தொடர்ந்து உணர்கின்றன. அவை மீண்டுவந்து அடுத்த பொங்கலையும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே என் வேண்டுதல்,” என்றார் திரு முகுந்தன்.