எண்பத்திரண்டு வயது திரு டான் எங் ஹுவா கடந்த 10 ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் இயங்கிக்கொண்டிருக்கும் தனது மனைவியைக் கவனித்துக்கொள்கிறார். தனது மனைவியைக் குளிப்பாட்டிவிடுவது, அவருக்கு சமைத்துத் தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தம்பதியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் இவர்கள் உட்பட 300 குடும்பங்களுக்குச் சீனப் புத்தாண்டையொட்டி அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. 'வீகேர் அட் நார்த் வெஸ்ட் - சர்விஸ் வீக்ஸ்' எனும் திட்டத்தின்கீழ் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் அன்பளிப்புப் பைகளை வழங்கியது. ஆண்டின் தொடக்கத்தில் வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு உதவுவது இத்திட்டத்தின் இலக்கு.
ஒவ்வொரு பையிலும் சுமார் 90 வெள்ளி மதிப்புள்ள உணவுப் பொருள்கள் இருந்தன. ஐந்து கிலோகிராம் எடைகொண்ட அரிசி உள்ள பையைத் திரு டான் பெற்றுக்கொண்டார்.
"சிறிய உதவியாக இருந்தாலும் இத்தகைய ஒவ்வொரு நடவடிக்கையும் கைகொடுக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
வடமேற்கு சமூக மன்றத்தின் வர்த்தகப் பங்காளியான 'சிடிஎல்' எனும் 'சிட்டி டிவெலப்மெண்ட் லிமிட்டெட்', இவ்வாண்டு ஒன்பது வீடுகளுக்குத் தேவையான புதிய அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கியது. சமூகத்திற்குக் கைமாறு செய்யும் கலாசாரம் தனது நிறுவனத்திற்கு இருந்து வந்துள்ளதாக 'சிடிஎல்'லின் மூத்த துணைத் தலைவர் ஃபூ சுய் முய் கூறினார். லிம்பாங் பேட்டையில் உள்ள வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு உதவ வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் 2016ஆம் ஆண்டிலிருந்து எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குத் தனது நிறுவனம் ஆதரவளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாண்டு அன்பளிப்புப் பைகளை வழங்க தனது நிறுவனத்தின் ஊழியர்கள் முன்வந்த விதம் பெரும் மகிழ்ச்சி தந்துள்ளதாக அவர் சொன்னார்.
அட்மிரல்டி, கேன்பெரா, வுட்குரோவ் உள்ளிட்ட பகுதிகளின் 14 பிரிவுகளில் இருக்கும் சுமார் 7,300 வீடுகள் இந்த முயற்சியால் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி அமைச்சரும் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லாரன்ஸ் வோங்கும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டார்.
"கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் பல குடியிருப்பாளர்கள் சவாலான சூழலை எதிர்நோக்கும்போது இது மிகவும் அர்த்தமுள்ள ஒரு நடவடிக்கை என்று நாம் நினைக்கிறோம்.
"அதனால் கடந்த சில ஆண்டுகளாகக் கூடுதல் முயற்சிகளை எடுத்து வருகிறோம், வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு மளிகைப் பொருள்களை விநியோகிக்கிறோம் அல்லது நிதியுதவி வழங்குகிறோம், ஆனால் தனிப்பட்ட முறையில் இதில் ஈடுபடும்போது அது நல்லதோர் உணர்வைத் தருகிறது," என்று திரு வோங் கூறினார்.