சிங்கப்பூருக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவைக் கெளரவிக்க மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் ஆர்க்கிட் மலர் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'டென்ரோபியம் எக்ஸ்போ 2020 துபாய்' என்றழைக்கப்படும் அந்த மலர், இயற்கை மீது இரு நாடுகளும் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் எடுத்துக்காட்டுவதாகத் திரு தியோ கூறினார். இந்த ஆர்க்கிட் மலர் சிங்கப்பூர் பூமலையில் வளர்க்கப்பட்டது. இதன் இதழ்களில் மஞ்சள், ஊதா நிறங்கள் கலந்திருக்கும். 'எக்ஸ்போ 2020 துபாய்' எனும் கண்காட்சி நிகழ்ச்சியில் 'சிங்கப்பூர் தினம்' எனும் அங்கத்தில் திரு டியோ பேசினார்.
ஆறு மாதங்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியன்று தொடங்கியது. வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதியன்று அது நிறைவுபெறும்.
"நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கொண்ட வருங்காலத்தை உருவாக்குவதை இவ்விரு நாடுகளும் பெரிய அளவில் வலியுறுத்துகின்றன.
"நமது தேசத் தந்தைகள் விதைத்த இந்தக் கொள்கையை இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன," என்று திரு டியோ குறிப்பிட்டார்.
"ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் மறைந்த தேசத் தந்தையான மன்னர் ஷேக் சையது பின் சுல்தான் அல் நஹ்யான், தனது நாடு, அதன் வரலாறு, மரபு ஆகியவற்றில் சுற்றுச்சூழல் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறியிருக்கிறார்.
"சிங்கப்பூரில் நமது முதல் பிரதமர் லீ குவான் இயூவின் கனவையொட்டி 1960களிலேயே பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் அக்கறை காட்டத் தொடங்கினோம், 'நீடித்த நிலைத்தன்மை', 'பருவநிலை மாற்றம்' போன்ற வார்த்தைகள் பயன்பாட்டிற்கு வருவதற்குப் பல காலம் முன்னரே அதற்கான முயற்சியை எடுத்தோம்," என்றும் திரு டியோ சுட்டினார். உலகளவில் கண்காட்சி நிகழ்ச்சியை நடத்தியதற்குத் திரு டியோ தனது உரையில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைப் பாராட்டினார். இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது சாதாரணமன்று என்பதை அவர் சுட்டினார். அதுவும் கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் அந்நாடு இதைச் செய்து காட்டியதை அவர் குறிப்பிட்டார்.
'டெண்ரோபியம் எக்ஸ்போ 2020 துபாய்' கலப்பு ஆர்க்கிட் சில நாள்களுக்கு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருக்கும்.