சீனப் புத்தாண்டையொட்டி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியன்று இஸ்தானா அதிபர் மாளிகை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். இஸ்தானாவிற்குச் செல்ல பொதுமக்கள் முன்னதாகவே இலவசமாக வழங்கப்படும் நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
நாளை முதல் பொதுமக்கள் நுழைவுச்சீட்டுகளைப் பெற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்தானா நேற்று முன்தினம் தெரிவித்தது.
ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் அதிகபட்சமாக ஐவருக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.
பார்வையாளர்கள் எத்தனை மணிக்கு இஸ்தானா செல்ல விரும்புகின்றனர் என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிடவேண்டும். காலை ஒன்பது அல்லது 11 மணி, மதியம் ஒன்று அல்லது மூன்று ஆகிய வேளைகளில் செல்லலாம். இஸ்தானாவில் இரண்டு மணிநேரம் இருக்க அனுமதி உண்டு.
பொதுமக்கள் வருகை தரும்போது இஸ்தானாவில் பாதுகாப்பு தூர இடைவெளி நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும். கேளிக்கை, இசைப் படைப்புகள், உணவு விற்கும் வாகனங்கள் போன்றவை இருக்காது.
இஸ்தானா மாளிகையின் வெளிப்புறத் தோட்டங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல அனுமதி உண்டு. மாளிகையைச் சுற்றிக் காட்டும் நடவடிக்கைகளும் இம்முறை இருக்காது.
பொதுமக்கள் பாதுகாப்பு தூர இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய பாதுகாப்பு தூர இடைவெளித் தூதர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
அரிய இஸ்தானா நினைவுச் சின்னங்களை விற்கும் கூடாரங்கள் எழுப்பப்படும். அவற்றில் அதிபர் சவால் நினைவுச் சின்னங்களையும் வாங்கிக்கொள்ளலாம்.
விற்பனையின் மூலம் ஈட்டப்படும் தொகை அதிபர் சவால் நிதித் திட்டம் ஆதரவளிக்கும் நன்கொடை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
அதிபர் சவால், சமூகத்தைச் சென்றடைய ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் இயக்கம். இதில் நிதி திரட்டுவதற்கான முயற்சிகளும் அடங்கும்.
எனினும், ரொக்கமற்ற கட்டண முறைகளைக் கொண்டு மட்டுமே இஸ்தானாவில் நினைவுச் சின்னங்களை வாங்கமுடியும்.
இதற்குமுன் கடைசியாக சென்ற ஆண்டு தீபாவளித் திருநாளன்று நவம்பர் மாதம் நான்காம் தேதியில் இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. அப்போது சுமார் 2,000 பேர் திரண்டனர்.
கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளையொட்டி இஸ்தானா மாளிகை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படவில்லை.