கொவிட்-19 சூழலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டின் மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளது. சிங்கப்பூரிலுள்ள பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் இன்றிரவு முழுவதும் கண்விழித்து கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 சூழலுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது மகா சிவராத்திரி பெருவிழாவாக இது உள்ளது. கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோவில் இந்த விழாவிற்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறது.
இன்று மாலை 6 மணியளவில் முதல் கால பூஜை தொடங்கி நாளை அதிகாலை 5 மணிக்கு திருக்கல்யாண பெருவிழாவுடன் நிறைவுபெறும். அந்த ஆலயத்திற்கு மொத்தம் 6,000 பக்தர்கள் வருகை அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு அந்த ஆலயத்திற்கு வருகையளித்த பக்தர்களின் எண்ணிக்கை 8,000ஆக இருந்ததாக ஆலயம் தமிழ் முரசிடம் கூறியது.
கேலாங் ஈஸ்ட் சென்ட்ரலுக்கும் கேலாங் ஈஸ்ட் அவென்யூ 3க்கும் இடையிலான கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ன் ஒருபகுதி அடுத்த நாள் காலை 5 மணிவரை மூடப்படும்.
பெருவிழாவிற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார்.
நான்கு காலங்களிலும் பக்தர்கள் வந்து பால்குடம், சந்தனக்குடம், திருநீற்றுக்குடம் முதலானவற்றைச் சமர்ப்பிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஃபேஸ்புக் பக்கத்தின் நேரலை சேவையின் வழி திருவிழாவைக் காணலாம்.
புனிதமர பாலசுப்பிரமணியர் ஆலயத்திற்கு மகா சிவராத்திரிக்காக ஏறத்தாழ 1,000 பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுவதாக ஆலயம் தமிழ் முரசிடம் பகிர்ந்தது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துப்போகவேண்டும் என்றும் நான்கு கால பூஜைகளில் ஒவ்வொரு காலத்திற்குப் பிறகும் பக்தர்கள் வெளியேறும்படி ஆலயம் கேட்டுக்கொள்ளும் என்று ஆலயத்தின் செயலாளர் அண்ணாதுரை அழகப்பன் தெரித்தார்.
ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயம் போன்ற ஆலயங்கள் இப்பெருவிழாவைச் சிறிய அளவில் நடத்துகின்றன. விழாவின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆலயத்தில் எந்நேரமும் கிட்டத்தட்ட 100 பேர் வரை இருப்பர் என்று அதன் செயலாளர் ரோய் கோபிநாதன் தெரிவித்தார்.