பொது சுகாதார தயார்நிலை மருந்தகங்களும் பலதுறை மருந்தகங்களும் மார்ச் 11ஆம் தேதி இன்று முதல் கூடுதல் நேரம் திறந்திருக்காமல் வழக்க நேரங்களில் செயல்படும்.
ஓமிக்ரான் அலை குறையும் அறிகுறிகள் இருப்பதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இதைத் தெரிவித்துள்ளது.
மருந்தகங்களிலும் பொது மருந்தகங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் அதிக நோயாளி எண்ணிக்கையைக் குறைக்க, பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை குறிப்பிட்ட மருந்தகங்கள் கூடுதல் நேரம் திறந்திருந்தன.
மார்ச் 11 முதல் அவை வழக்கமான நேரத்தில் மட்டும் திறந்திருக்கும் என்றும் இது அவற்றுக்கு அதிகம் தேவைப்படும் ஓய்வை அளிக்கும் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
ஓமிக்ரான் தொற்று உயர்வைச் சமாளிக்க முன்வந்து உதவிய பொது மருந்தகங்களுக்கு அமைச்சு நன்றி தெரிவித்துக் கொண்டது.
இருப்பினும், 655க்கும் அதிகமான பொது சுகாதார தயார்நிலை மருந்தகங்கள் வாரநாள்களில் இரவிலும் வார இறுதிநாள்களிலும் வெவ்வேறு நேரங்களில் திறந்திருக்கும் என்று அமைச்சு கூறியது.
கொவிட்-19 தொற்று நிலவரம்
இந்நிலையில் சிங்கப்பூரில் வியாழன் (மார்ச் 10) அன்று பதிவான புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
வியாழன் அன்று 16,165 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. 1,450 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம், 0.93 ஆக இருந்தது.
அந்த விகிதம் தொடர்ந்து ஒன்பவதாவது நாளாக ஒன்றுக்குக் கீழே உள்ளது. வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் ஒன்றுக்கு கீழ் இருந்தால், தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று பொருள்படும்.
இத்துடன் ஆறு பேர் கொவிட்-19 உயிர் இழந்தனர்.