மாலை ஆறு மணியளவில் வாடகை வாகனச் சேவைகளுக்கான செயலிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேடியபோதும் வாகனம் கிடைப்பதில்லை. 'கிராப்', 'கோஜெக்', 'கம்ஃப்ர்ட்டெல்குரோ' ஆகிய அனைத்து நிறுவனங்களின் செயலிகளுக்கும் இது பொருந்தும்.
டாக்சி நிறுத்திமிடத்துக்குச் சென்றால் அங்கு பலர் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருப்பர். ஒருவழியாக அருகில் வேறு பகுதியில் இருக்கும் டாக்சியை நிறுத்தி அதில் பயணம் மேற்கொள்ளும்போது வரும் கட்டணம், வாடகை வாகன செயலிகளில் நிர்ணயிப்பதில் கிட்டத்தட்ட பாதியாக இருக்கும்.
சிங்கப்பூரில் பெரும்பாலான கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வரும் வேளையில் இது பல பயணிகள் எதிர்நோக்கிவரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஈராண்டுகளாக டாக்சி, வாடகை வாகனச் சேவைகளுக்கான தேவை குறைந்திருந்தது. இப்போது கூடுதலானோர் வேலையிடங்களுக்குப் போகின்றனர், இரவில் வெளியே செல்கின்றனர்.
பொதுவாக அதிகமானோர் இப்போது வெளியே செல்வதால் உச்ச நேரங்களில் டாக்சி, வாடகை வாகனச் சேவைகளுக்கான கட்டணம் இரண்டு அல்லது மும்மடங்கும் ஆகிறது.
கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து டாக்சி, வாடகை வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது. அதுவும் இத்தகைய பிரச்சினைகளுக்குக் காரணம்.
சென்ற ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி சிங்கப்பூரில் 15,048 டாக்சி ஓட்டுநர்கள் இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18,542ஆக இருந்தது.
தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கையும் 77,141லிருந்து 68,091க்குச் சரிந்துள்ளது.
பிரச்சினையைச் சமாளிக்க இரவில் கூடுதல் பயணங்களை மேற்கொள்ளுமாறு தனது ஓட்டுநர்களை ஊக்குவித்து வருவதாக 'கம்ஃபர்ட்டெல்குரோ,' ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. ஆனால், அந்நிறுவனம் தற்போதைக்கு இதன் தொடர்பில் நிதி சார்ந்த அனுகூலங்களை வழங்கவில்லை. 'கோஜெக்'கும் தகுந்த முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தது. இது குறித்து 'கிராப் கருத்து தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, டாக்சி ஓட்டுநர்கள் இன்னமும் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்று பயணிகளுக்காகக் காத்திருக்கத் தயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகமானோர் மீண்டும் விமானப் பயணங்களை மேற்கொண்டு வரும்போதும் இந்நிலை உருவெடுத்துள்ளது.
இதனால் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.