பொது தொடர்பில் மொழிபெயர்ப்புகளைச் சீர்ப்படுத்துதல், மொழிபெயர்ப்புப் பிழைகளைச் சுட்டிக்காட்டுதல், ‘மொழிபெயர்ப்பில் குடிமக்கள் திட்டப்பணி’ (Citizen Translators Project) குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளுதல் என பல்வேறு வழிகளில் பங்காற்றிய 360க்கும் மேற்பட்டவர்களுக்கு ‘மொழிபெயர்ப்பில் குடிமக்கள்’ என அங்கீகரிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டப்பணியின் கீழ் தகுதிபெறும் முதல் ‘மொழிபெயர்ப்பில் குடிமக்கள்’ இவர்கள்.
தொடர்பு, தகவல் அமைச்சின் தேசிய மொழிபெயர்ப்பு குழுவின்கீழ் அமைக்கப்பட்ட ‘மொழிபெயர்ப்பில் குடிமக்கள் திட்டப்பணி பொதுமக்களின் துணையோடு அரசாங்க தொடர்பு ஆவணங்களில் பொருத்தமான மொழிபெயர்ப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவும்.
அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறுகியக்கால, எதிர்கால திட்டங்களை மேற்பார்வையிடுவதற்காகவும் இக்குழு 2014இல் அமைக்கப்பட்டது.
திட்டத்தில் 1,180 மக்கள் மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 73 பேர் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக கட்டுரை, கவிதை, சிறுகதை ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்த்து வருகிற திரு மகேஷ் குமார் இராமமூர்த்தி இம்முயற்சியில் உதவிவருகிறார். சிங்பாஸ் செயலி முதலியவற்றில் இவரது ஈடுபாடு இருந்துள்ளது.
“மொழியின் மீதுள்ள பற்றைச் சமூகத்துக்குப் பங்காற்ற உதவ இத்திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு. சமூகத்தினருடன் தொடர்புகொள்ளும் அரசாங்கத்தின் செய்திகளை மக்களுக்குச் சரிவர கொண்டுசேர்ப்பதில் எனக்கும் ஒரு பங்கிருப்பதைக் கருதி நான் நிறைவடைகிறேன்,” என்றார் மூத்த வணிக ஆய்வாளரான திரு மகேஷ் குமார், 52.
இவ்வாண்டு முதல், ஆண்டுதோறும் மூன்று நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சான்றிதழும், ஐந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்குப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும். மேம்பட்ட நிலைக்கு தகுதிபெறுவோர், மொழிபெயர்ப்பு சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளவும், தகுதி சான்றிதழ் பெறவும் பயிற்சி கட்டணக்கழிவுகள் பெறக்கூடும்.
தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் மற்றுமொரு முயற்சியானது, ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்படவிருக்கும் ‘எஸ்.ஜி ஒன்றாக மொழிபெயர்த்தல்’ இணையத்தளம். மொழிபெயர்ப்பு தரவுகளை அளித்து மொழிபெயர்ப்பு தரத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இத்தளம் வாய்ப்பளிக்கும். தளத்தில் உள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டும் திருத்தப்பட்ட மொழிபெயர்ப்புகளைச் சமர்ப்பித்தும் மக்கள் இம்முயற்சியில் ஈடுபடலாம்.