இம்மாதம் வேலை மோசடிகளால் ஏமாற்றப்பட்ட 50க்கும் அதிகமானோர் மோசடிக்காரர்களிடம் குறைந்தது $430,000ஐ பறிகொடுத்துள்ளனர். காவல்துறையினர் இந்தத் தகவலை நேற்று வெளியிட்டனர்.
பாதிக்கப்பட்டோருக்கு மின்வர்த்தகத் தளங்கள் அனுப்புவதைப் போலிருக்கும் குறுந்தகவல்கள் வரும். வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுவதாக அவற்றில் குறிப்பிடப்படும்.
பொதுவாக குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக குறுந்தகவல்கள் அனுப்பப்படும்.
அதிக பணம் ஈட்டக்கூடிய எளிமையான விளம்பரத் துறை வேலைகள் வழங்கப்படுவதாக அவற்றில் தெரிவிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, தாங்கள் விரும்பும் ஒவ்வொரு பொருளுக்கும் $2 வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
தொடக்கத்தில் தரகுத்தொகை உண்மையிலேயே வழங்கப்படும். பின்னர், மேலும் செலவு செய்தால் கூடுதல் தரகுத்தொகை வழங்கப்படுவதாகக் கூறி மக்கள் ஏமாற்றப்படுவர். இத்தகைய மோசடிகளால் ஏமாற்றப்படுவோர் பணத்தை இழக்க நேரிடுகிறது.
சிரமமின்றி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறும் சந்தேகம் தரக்கூடிய வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு நினைவூட்டினர்.
சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மோசடிச் செயல்களில் பெரும்பாலானவை வேலை தொடர்பான மோசடிகள். 4,550க்கும் அதிகமான வேலை மோசடிச் செயல்களால் பாதிக்கப்பட்டோர் குறைந்தது $91 மில்லியனை இழந்தனர்.
இத்தகைய மோசடிச் செயல்களைப் பற்றித் தகவல் வைத்திருப்போர் 1800-255-0000 என்ற காவல்துறையின் தொலைப்பேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். https://www.police.gov.sg/iwitness என்ற இணைய முகவரிக்குச் சென்றும் புகாரைச் சமர்ப்பிக்கலாம்.