ஹவ்காங் சமூக மன்றத்திலும் செஞ்சா-கேஷு சமூக மன்றத்திலும் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான கடைசி இரு கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் ஜூன் 30ஆம் தேதி மூடப்படும்.
ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்களில் பெரும்பாலானோர் கொவிட்-19க்கு எதிரான முதலிரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இவ்விரு தடுப்பூசி நிலையங்களிலும் அவற்றின் கடைசி முதல் தடுப்பூசி ஜூன் 9ஆம் தேதியும் இரண்டாவது தடுப்பூசி ஜூன் 30ஆம் தேதியும் போடப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, மூன்று பலதுறை மருந்தகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களும் சிறுவர்களுக்கான தடுப்பூசியை வழங்கத் தொடங்கும் என்று அமைச்சு சொன்னது.
பைனியர், பொங்கோல், உட்லண்ட்ஸ் பலதுறை மருந்தகங்கள் மே 18ஆம் தேதிமுதல் தடுப்பூசியை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்கள் மே 25ஆம் தேதியிலிருந்து தடுப்பூசியை வழங்கும்.
ஹவ்காங் சமூக மன்றத்திலும் செஞ்சா-கேஷு சமூக மன்றத்திலும் சிறுவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் கடந்த டிசம்பரில் திறக்கப்பட்டன.
ஏப்ரல் 30ஆம் தேதி 10 தடுப்பூசி நிலையங்கள் மூடப்பட்டும் இவ்விரு நிலையங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
சிங்கப்பூரில் தற்போது 28 கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 40 நிலையங்கள் இருந்தன.
மே இறுதிவரை 20 தடுப்பூசி நிலையங்கள் செயல்படும். ஜூன் இறுதிவரை ஆறு நிலையங்கள் இயங்கும்.
அதன் பிறகு இரு நிலையங்கள் மட்டுமே செயல்படும். ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்திலும் முன்னாள் ஹொங் கா உயர்நிலைப்பள்ளியிலும் அவை அமைந்து உள்ளன.
ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்களில் ஏறக்குறைய 81 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசிக்குப் பதிந்துள்ளனர், அல்லது அதைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளையில், 69 விழுக்காட்டினர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்று அமைச்சு கூறியது.
தொடக்கப்பள்ளி மாணவர்களில் 86 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் குறைந்தது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். 77 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு உள்ளனர்.
2016, 2017ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களைப் பொறுத்தமட்டில், ஏறக்குறைய 35,600 பேர் சுகாதார அமைச்சின் தேசிய முன்பதிவு முறையில் தடுப்பூசிக்குப் பதிந்து உள்ளனர்.
ஏறக்குறைய 32,700 பேர் குறைந்தது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். 26,700 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பலதுறை மருந்தகங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களிலும் சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள, child.vaccine.gov.sg எனும் இணையப் பக்கத்தில் பெற்றோர் அவர்களுக்காக பதிய வேண்டும்.