இதய வால்வு கசியும் பிரச்சினை உடையோர், அதற்குத் தீர்வுகாண குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சையைப் பெறலாம். சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தில் இரு புதிய சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளதால் இது சாத்தியமாகிறது.
'டிரைகஸ்பிட் ரிகர்ஜிட்டேஷன்' என்று ஆங்கிலத்தில் இந்த மருத்துவப் பிரச்சினை அழைக்கப்படுகிறது. இதயத்தின் வலதுப் புறத்தில் உள்ள இந்த வால்வு சரியாக மூடும் திறன்பெறாமல் இருந்தால், ரத்தம் பின்னோக்கி கசிகிறது.
இந்தக் கசிவு மோசமடையும்போது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.
இதய வால்வு கசிவு மோசம் அடைந்தும் அது குணப்படுத்தப்படாதபோது, அந்தப் பிரச்சினை கண்டறியப்பட்ட ஓராண்டிற்குள் 36 விழுக்காடு நோயாளிகள் இறந்துவிடுவர் என்று சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் வோங் நிங்யன் நேற்று கூறினார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் வெறும் 14 விழுக்காட்டினரே, நோய் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக உயிர் வாழ்ந்தனர்.
இந்தப் பிரச்சினை உடையோரிடம் மூச்சுத்திணறல், கால்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். அவற்றை மட்டுப்படுத்த நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. பழுதடைந்த இதய வால்வை சரிசெய்யவோ அதை மாற்றவோ நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
என்றாலும், அறுவை சிகிச்சை செய்துகொண்டால் மருத்துவச் சிக்கல் ஏற்படும் அபாயம் நிலவுவதால், நோயாளிகள் பலரும் வால்வு கசிவு பிரச்சினையைக் குணப்படுத்தாமலேயே விட்டுவிடுகின்றனர் என்று டாக்டர் வோங் கூறினார்.
இதய வால்வு கசிவு பிரச்சினை இருந்தும் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதிபெறாதவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தில் இரு புதிய சிகிச்சை முறைகள் வழங்கப்படுகின்றன.
மோசமான இதய வால்வு கசிவு உடையோருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை வழங்கப்பட்டு வந்தாலும், அது அவ்வளவு எளிதானதல்ல என்று சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்தின் மூத்த மருத்துவரான இணைப் பேராசிரியர் இயோ குங் கியோங் கூறினார்.
அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவோர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட வேண்டியிருப்பதைச் சுட்டிய அவர், நோயாளிகள் குணமடைய ஒரு வாரத்திலிருந்து ஒரு சில மாதங்கள் வரை ஆகலாம் என்றார்.
எனினும், புதிய சிகிச்சை முறைகள் மூலம், நோயாளிகளுக்கு இதர மருத்துவப் பிரச்சினைகள் இல்லையென்றால் மூன்று நாள்களில் அவர்கள் வீடு திரும்பிவிடலாம். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயமும் இராது.
மோசமான அறிகுறிகளுடன் காணப்படும் இதய வால்வு கசிவு உடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்தப் புதிய சிகிச்சை முறை வழங்கப்படும் என்று டாக்டர் வோங் சொன்னார். பல மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்தச் சிகிச்சை முறை வழங்கப்படும். ஆண்டுக்கு 10 முதல் 15 நோயாளிகள் வரை இந்தச் சிகிச்சை முறையால் பயனடைவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக பேராசிரியர் இயோ கூறினார்.