இவ்வாண்டு இதுவரை மோசடிச் செயல்களுக்கு ஆளான குறைந்தது 587 பேர் மொத்தம் 2.7 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்துள்ளனர்.
நண்பர்களைப் போல் நடித்து ஏமாற்றுக்காரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இம்மாதம் மட்டுமே குறைந்தது 43 பேர் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மொத்தமாக 177,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்தனர்.
'+' எனும் குறிப்பைக் கொண்ட கேள்விப்படாத தொலைபேசி எண்களிலிருந்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அதன்வழி தனிப்பட்ட விவரங்களைத் திருடும் மோசடிச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய மோசடிச் செயல்களைப் பற்றித் தகவல்களை வைத்திருப்போர் 1800-255-0000 என்ற காவல்துறையின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தோ https://www.police.gov.sg/iwitness என்ற இணையத்தளத்தின் வாயிலாகவோ அவற்றைத் தெரியப்படுத்தலாம்.