சிறுவர்களுக்குப் பிடித்தமான தொழில்நுட்பத் தளங்களைப் பயன்படுத்துவதும் அவை அச்சிறுவர்களை ஈர்ப்பதில் வெற்றியைக் கண்டுள்ளனவா என ஆராய்வதும் மிக முக்கியம் என சிறுவர்கள் புத்தகங்களையொட்டிய உயிரோவிய வெளியீட்டில் வலியுறுத்தியுள்ளார் அதிபர் ஹலிமா யாக்கொப்.
ஈராண்டுகளுக்குப் பின்னர் அதிபர் ஹலிமாவோடு இன்று சிறுவர்களுக்கு 'பிக்னிக்' கூட்டமொன்றும் புத்தகங்களின் கதையையொட்டிய உயிரோவியக் காணொளி வெளியீட்டு நிகழ்ச்சியும் இஸ்தானா மாளிகையில் ஏற்பாடு செய்ப்பட்டது.
'தி கூரியஸ் சௌன்ட்ஸ் ஆஃப் த இஸ்தானா' என்ற தலைப்பில் இவ்வுயிரோவியம் விருந்தனர்களுக்குக் காட்டப்பட்டது.
அதில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், இஸ்தானாவிலுள்ள சிறப்பு அம்சங்களையும் அதன் சுற்றுப்புறத்தையும் சிறூவர்களுக்குச் சுற்றிக் காட்டினார்.
அதிபர் ஹலிமா, பல்லின சமுதாயத்தை பிரதிநிதிக்கும் குரல் கொண்ட சிறுவர்கள் நால்வரின் கதாபாத்திரங்கள், என பல நிஜ கதாபாத்திரங்களைக் கொண்டு நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியைச் சேர்ந்தக் குழு அதிபர் அலுவலகத்தோடு இணைந்து இவ்வுயிரோவியத்தைத் தயாரித்துள்ளது.
"புத்தகங்களைப் படிக்க பிடிக்குமா அல்லது புத்தகத்தில் வரும் கதையை உயிரோவிய வடிவில் பார்க்க பிடிக்குமா என நான் சிறுவர்களிடம் கேட்டபோது அனைவரும் உடனடியாகவே அவர்கள் உயிரோவிக் காணொளியைக் காண விரும்புவார்கள் என்று என்னிடம் எந்த ஐயமுமின்றி கூறியிருந்தனர்," என பகிர்ந்துகொண்டார் அதிபர் ஹலிமா.
நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ரையன் சின், இவ்வுயிரோவியத்தை படிப்படியாக செய்து முடிப்பதற்கு மொத்தம் ஆறு மாதங்கள் எடுக்கப்பட்டது எனக் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துறைப் பள்ளியில் பாடங்கள் கற்பிக்கும் சின், " முதலில் மூன்று நிமிட உயிரோவியத்தைத் தயாரிக்கலாம் என முடிவெடுத்திருந்தாலும் பின்பு அந்த மூன்று நிமிடங்களுக்குள் முழு கதையைச் சொல்வது கடினம் என உணர்ந்தோம். அதனால் ஐந்து நிமிட உயிரோவியத்தை தயாரித்துள்ளோம், எங்கள் உருவாக்கத்தைப் பற்றி எண்ணும்போது மிகவும் பெருமையாக உள்ளது," என புன்னகையோடு சொன்னார்.
இஸ்தானா மாளிகையை பொதுமக்கள் இன்னும் அதிகமாகவும் சுலபமாகவும் அணுக வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிபரின் அலுவலகம் இவ்வுயிரோவிய நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
அதிபர் ஹலிமா ரிவர்லைஃப் சமூகச் சேவைக் குழுவைச் சேர்ந்த சிறுவர்களுடன் உரையாடி இஸ்தானா மாளிகையின் பூங்காவில் 'பிக்னிக்' கூட்டத்தைத் துவங்கினார்.
'பிக்னிக்' கூட்டத்திற்கு வந்திருந்த தாயார் ப்ரியதர்ஷினி பாலாகனேஷ், " பிள்ளைகளோடுச் சேர்ந்து இஸ்தானாவில் 'பிக்னிக்' செய்வது எங்களுக்கு புதுமையான அனுபவமாக அமைந்துள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு வெளியில் சென்று சுவாசிப்பதே நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது," என்று தமிழ் முரசிடம் சொன்னார்
'பிக்னிக்' முடிந்த பிறகு சிறுவர்களுக்கு இஸ்தானாவிலிருக்கும் தோட்டங்களைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் தரப்பட்டது. பலதரப்பட்ட பூச்செடிகள், மூலிகைச்செடிகள் போன்றவற்றைப் பற்றி சுவாரசியமானத் தகவல்களும் தேசிய பூங்கா வாரியத்தின் தொண்டூழியர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இஸ்தானா மாளிகையில் கடைசியாக 2019-ஆம் ஆண்டு 'பிக்னிக்' கூட்டம் நடந்தது.
நம் புலன்களுக்கு விருந்தளிக்கும் இம்மாதிரியான நடவடிக்கைகளை நாம் மென்மேலும் எதிர்பார்க்கலாம் என அதிபர் ஹலிமா தமிழ் முரசிடம் கூறினார்.