வேலையிடப் பாதுகாப்பு பற்றி வெளிநாட்டு ஊழியர்களுக்கு இணையம் வழியாக சிறுசிறு பயிற்சி வகுப்புகள் ஒரு முன்னோடித் திட்டத்தில் வழங்கப்பட உள்ளன.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரசும் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் இணைந்து அத்திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மே 29) அன்று அறிவித்தன.
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களிடையே வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த உயர்ந்த தரத்தைக் காட்டிக் காப்பது அந்த முன்னோடித் திட்டத்தின் நோக்கம்.
ஊழியர்கள் ஓய்வாக இருக்கும்போது தங்களுக்கு தோதான வேகத்தில் பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளலாம்.
திட்டம் பற்றிய மேல்விவரத்தை பின்னொரு தேதியில் அறிவிக்க உள்ளதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியது.
அண்மையில் சிங்கப்பூரில் அதிகமான வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததை அடுத்து, திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வேலையிட மரணங்களால், தங்கள் வழக்கமான பணிகளை நிறுத்திவிட்டு பாதுகாப்பு நடைமுறைகளை சரிசெய்யுமாறு சிங்கப்பூர் முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் அரசாங்கம் வலியுறுத்தியது.
இந்நிலையில் மே தினத்தை ஒட்டி வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியில் 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
பயனியர் ரோடு அருகே உள்ள வெளிநாட்டு ஊழியர் நிலையப் பொழுதுபோக்கு மன்றத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது.
கொவிட்-19 பரவல் சூழலில் கடுமையாக உழைத்த வெளிநாட்டு ஊழியர்களை அங்கீகரிப்பது அதன் நோக்கம்.
கிரிக்கெட் போட்டி, புகைப்பட போட்டி ஆகியவை நிகழ்ச்சியில் நடைபெற்றன. அன்பளிப்புப் பைகள், ரொக்க பற்றுச்சீட்டுகள், உணவுப் பொட்டலங்கள் போன்றவை வழங்கப்பட்டன.
பல்வேறு தங்குவிடுதிகளில் வசிக்கும் இத்தனை ஊழியர்கள் ஒரே இடத்தில் திரண்டதில் மகிழ்ச்சி அடைந்தார் கப்பல்பட்டறையில் தர நிர்ணய ஆய்வாளராகப் பணியாற்றும் சிவந்தபெருமாள் பகத்சிங், 29.
அவர் தலைமை வகித்த ஸ்டார் பாய்ஸ் அணி கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.
"நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது எங்கள் மனம் இன்னும் தெளிவாகிறது. வேலை, குடும்பச் சுமைகளை மறந்து மகிழ முடிகிறது," என்றார் திரு சிவந்தபெருமாள் பகத்சிங்.