சிங்கப்பூருக்கு வெளிநாட்டுச்
சுற்றுப்பயணிகள் மீண்டும் திரும்பியிருப்பதால் நாட்டின் சில்லறை வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் தளர்த்தியதை அடுத்து சில்லறை வர்த்தகம் மேம்பட்டுள்ளது. இந்தத் தகவலை புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்டது.
சில்லறை வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டுக்காண்டு அடிப்
படையில் 12.1 விழுக்காடு அதிகரித்தது. வாகன விற்பனையைச் சேர்க்காமல், சில்லறை வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதம் 17.4 விழுக்காடு ஏற்றம் கண்டது.
கடந்த ஆண்டு இதே மாதத்தைக் காட்டிலும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான துறைகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்தது. ஆடைகள், காலணிகள் ஆகியவற்றுக்கான சில்லறை வர்த்தகம் ஆக அதிகமாக உயர்ந்தது. அவற்றின் சில்லறை வரத்தகம் 46.6 விழுக்காடு அதிகரித்தது. சுற்றுப்பயணிகள் பலர் பைகள், காலணிகள் ஆகியவற்றை வாங்கியதும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே உணவு, மது
பானம், கைக்கடிகாரம், நகைகள், பகுதிவாரிக் கடைகளில் உள்ள பொருள்கள் ஆகியவற்றுக்கான சில்லறை வர்த்தகம் 28.4 விழுக்காட்டுக்கும் 35.6 விழுக்காட்டுக்கும் இடையே உயர்ந்தது.
இதற்கு மாறாக, வாகன விற்பனை 16.4 விழுக்காடு சரிந்தது. மளிகைக் கடைகளின் வர்த்தகம் 5.5 விழுக்காடு குறைந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தின் மொத்த சில்லறை வர்த்தகம் தோராயமாக $3.7 மில்லியனாகப் பதிவானது. அதில் இணையம் வழி விற்பனை 12.5 விழுக்காடு. கடந்த மார்ச் மாதத்தில் இணையம் வழி விற்பனை 14.8 விழுக்காடாகப் பதிவானது.
அப்போது கூடுதல் தள்ளுபடித் திட்டங்கள் இருந்தன.
இணையம் வழி வர்த்தகங்களில் கணினி, தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான விற்பனை 48.2 விழுக்காடும் மரக்கலன்கள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான பொருள்களுக்கான விற்பனை 28.3 விழுக்காடும் பேரங்காடிகளில் பதிவான விற்பனை 14.8 விழுக்காடும் அடங்கும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உணவு மற்றும் பானத் துறையின் விற்பனை அதிகரித்தது. உணவு மற்றும் பானத் துறையின் விற்பனை ஆண்டுக்காண்டு அடிப்படையில் 11.4 விழுக்காடு உயர்ந்தது. உணவு மற்றும் பானத் துறைக்கான மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் $815ஆகப் பதிவானது. அதில் இணையம் வழி செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் தோராயமாக 27 விழுக்காடு.