காணொளிப் பகுப்பாய்வு மென் ெபாருளையும் சாதனத்தையும் பயன்படுத்தி வேலையிடப் பாதுகாப்பையும் வேலையிட விபத்துகளையும் தடுக்கும் வழிகள் குறித்து உள்ளூர் புது நிறுவனம் ஒன்று ஆராய்ந்து வருகிறது.
'இன்விஜிலோ டெக்னாலஜிஸ்' என்ற அந்த நிறுவனம், புகைப்படச் சாதனங்களையும் 'சேஃப்கீ' என்ற மென்பொருளையும் பயன்படுத்துகிறது. இதன்மூலம் பாதுகாப்பு விதிமீறல்கள் ஏதாவது இருந்தால் அதன்தொடர்பில் பயனீட்டாளர்கள் விழிப்பூட்டப்படுவார்கள்.
அந்த நிறுவனத்தின் அலுவலகம் ஆயர் ராஜா கிரசெண்டில் அமைந்து இருக்கிறது. அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று அங்கு சென்றிருந்தார்.
இயந்திர மனித தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை நேரடியாக அதிபருக்கு அந்த நிறுவனம் விளக்கிக் காட்டியது.
ஒரு படச்சாதனத்துக்கு எதிரே ஊழியர் ஒருவர் தலைக்கவசத்தையும் பாதுகாப்பு சாதனங்களையும் அணிந்துகொண்டால் அவை பயன் படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டக்கூடிய ஓர் அடையாளம் கணினித் திரையில் தெரியும்.
தலைக்கவசத்தை எடுத்துவிட்டால் உடனடியாக பாதுகாப்பு விதிமுறை மீறப்பட்டு இருக்கிறது என்று சொல்லி அந்த மென்பொருள் பயனீட்டாளர்களை எச்சரிக்கும்.
புதிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான விஷ்ணு சரண், 28, இது பற்றி நேற்று விளக்கினார்.
வேலையிடங்களில் பாதுகாப்பு பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்துவதும் பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்வதுதான் எங்களுடைய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
திரு விஷ்ணுவுக்கு ஏழு வயதாக இருந்தபோது அவருடைய குடும்பம், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு குடியேறியது.
திறன் விளக்கக் காட்சியைப் பார்வையிட்ட அதிபர் ஹலிமா, புதிய நிறுவனத்தைப் பாராட்டினார்.