வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதியாகியுள்ளது. சுகாதரா அமைச்சு சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த 45 வயது ஆடவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது நேற்று உறுதியானது. விமானப் பணியாளராக வேலை பார்க்கும் அவர் ஜூன் 15லிருந்து 17 வரை, ஜூன் 19 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவர் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்தது.
தற்போது தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் முயற்சி நடந்துவருகிறது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்புடை 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 21 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
தொற்று அபாயம் குறைவாக இருக்கும் மேலும் இருவர் தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர்.
பாதிக்கப்பட்டவருக்கு ஜூன் 14 அன்று தலைவலி ஏற்பட்டதாகவும், இரண்டு நாள்கள் கழித்து காய்ச்சல் வந்ததாகவும் சுகாதார அமைச்சு கூறியது. இந்த அறிகுறிகள் தணிந்த இரண்டு நாள்களில் அவரது உடலில் சொறி உருவானதாகக் கூறப்பட்டது. அன்று இரவு அவர் மருத்துவரை தொலைபேசி வழி கலந்து ஆலோசித்ததாகவும் அடுத்து நாளே தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்துக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர் பயணித்த விமானங்களில் சென்ற மற்றவர்கள், அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்த காலக்கட்டத்தில் சந்தித்தவர்கள் ஆகியோரை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் அவர் இருந்தபோது, பெரும்பாலும் ஹோட்டல் அறையில் இருந்ததாகவும், ஜுன் 16 அன்று ஒரு உடல்பிடித்துவிடும் நிலையத்துக்கும் மூன்று உணவகங்களுக்கும் சென்றதாகக் கூறப்பட்டது.
இதுபோன்ற இடங்களில் குரங்கம்மை பரவும் சாத்தியம் மிகக் குறைவு என்று அமைச்சு விளக்கியது. குரங்கம்மை தொற்று ஏற்பட பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு அல்லது அதிக நேரம் இருந்திருக்கவேண்டும் என அமைச்சு கூறியது. நோயாளி சென்ற நான்கு இடங்களும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.