கட்டுமானத் தளங்களில் கூடுதல் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் அமர்த்தப்படுவர் என மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார். வேலையிடங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் விபத்துகள், மரணங்கள் ஆகியவற்றை தொடர்ந்து தமது அமைச்சு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் குறித்து மறுஆய்வு செய்துவருவதாக அவர் கூறினார்.
தற்போது நடைமுறையில் உள்ள வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடப்பில் உள்ளன. அவற்றை மறுஆய்வு செய்வது முக்கியம் என்றார் அமைச்சர்.
கட்டுமானத் தளங்களில் அதிகமான பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் அமர்த்தப்பட்டால், வேலையிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மேம்படலாம் என்றார் திரு டான்.
இதோடு, கட்டுமானத் தளங்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத கட்டுமான நிறுவனங்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்றும், சிறந்த பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் தொழில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பணியிடத்தில் நேற்று ஓர் இந்திய ஊழியர் பாரந்தூக்கி அடியில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தோடு சேர்த்து இவ்வாண்டு 27 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒப்புநோக்க 2020ல் 30 வேலையிட மரணங்கள் நடந்துள்ளன.
27 மரணங்களில் பத்து கட்டுமானத் தளங்களில் நடந்திருப்பது அக்கறைக்குரியது என்றார் அமைச்சார். “உயிரிழப்புகளைத் தடுக்க நம்மால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும். ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்வதை நாம் உறுதிசெய்யவேண்டும்,” என்றார் திரு டான்.