காமன்வெல்த் குளோசில் ஒரு அடுக்குமாடி வீட்டில் தமது மகனின் சடலத்துடன் ஒரு வாரம் வாழ்ந்து வந்திருக்கிறார் ஒரு முதியவர்.
அந்த 80 வயது மதிக்கத்தக்க முதியவரின் 54 வயது மகன் ஒரு வாரத்துக்கு முன் உயிரிழந்ததாக சின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.
துர்நாற்றம் தாங்கமுடியாமல் அண்டைவீட்டார் காவல் துறையைத் தொடர்பு கொண்டனர்.
காமன்வெல்த் குளோஸ் புளோக் 85ல் உள்ள வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் பலமுறை கதவைத் தட்டியும் உள்ளே இருந்த முதியவர் கதவைத் திறக்கவில்லை. பூட்டு உடைப்பவரைக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது, கதறல் சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது. வரவேற்பு அறையில் ஆடவருடைய சடலம் இருந்தது.
அண்டை வீட்டில் வசிக்கும் ஒருவர் கடந்த ஒரு வாரமாக அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகக் கூறினார். நாற்றம் தாங்கமுடியாமல் காவல் துறையைத் தொடர்ப்பு கொண்டதாக அவர் சொன்னார்.
அதே மாடியில் வசித்த மற்றவர்கள் வழக்கத்துக்கு மாறாக துர்நாற்றம் எதுவும் வீசவில்லை என்று கூறினர். பல காவல் துறை வாகனங்களையும், ஆம்புலன்ஸ் வண்டியையும் பார்த்த பின்னர்தான் ஏதோ ஓர் அசம்பாவிதம் தங்கள் புளோக்கில் நடந்திருக்கலாம் என்பது தங்களுக்கு தெரியவந்ததாக அவர்கள் கூறினர்.
இச்சம்பவம் இயற்கைக்கு மாறானதல்ல என காவல் துறை குறிப்பிட்டது. விசாரணை நடந்துவருகிறது.