மேம்படுத்தப்பட்ட வசதிகள் காரணமாக அடுத்த ஆண்டில் இது கைகூடும்
உபின் தீவின் பிரதான கிராமத்திற்குத் தேவைப்படும் மின்சாரத்தில் 90% சூரிய சக்தியில் இருந்து உற்பத்தி செய்யப்படும். இந்த நிலையை 2023ல் சாத்தியமாக்கும் வகையில் அங்கு பல மேம்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
அந்த மேம்பாடுகளில் ஒன்றாக மின்கடத்திக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று நடந்த 'உபின் தின' நிகழ்ச்சியில் இதனை அறிவித்தார்.
அந்தக் கிராமத்தில் வசிக்கும் முதியோரின் வீடுகளில் எச்சரிக்கை பொத்தான்களைத் தேசிய பூங்கா கழகமும் கவ்டெக் (GovTech) அமைப்பும் பொருத்தி உள்ளன,
அவசர நேரத்தில் முதியவர்கள் அந்தப் பொத்தானை அழுத்தி உதவிக்கு அழைக்கலாம்.
அந்த முறை இப்போது பரிசோதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். தீ அணைப்பு ஆற்றலைக் கூட்ட அந்தத் தீவில் பல வசதிகள் ஏற்படுத்தப்படும். கள ஆய்வுகளை நடத்தவும் சுற்றுப்புற கல்விக்காகவும் உபின் வசிப்பிட ஆய்வுக் கூடம் அமைக்கப்படும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தேசிய பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாகி கென்னத் எர் ஆகியோரும் நேற்றைய உபின் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பூங்காக் கழகம்தான் உபின் தீவை நிர்வகித்து நடத்தும் மைய அமைப்பாகும். இந்தக் கழகம் கடந்த பல ஆண்டுகளில் எடுத்து வந்துள்ள உயிரினங்கள் மீட்சி முயற்சிகளைப் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மிதக்கும் ஈரப்பத நிலங்களுடன் கூடிய பெக்கான் குவாரி மேம்பாடு, தேனீக்களை உண்ணும் பறவைகளுக்கான இனப்பெருக்க வசதிகள் ஆகியவை அந்த முயற்சி களில் அடங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.