அலெக்சாண்டிரா மருத்துவமனை வளாகத்தில் ஒரு புதிய தாதிமை இல்லத்தை 2027ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இல் லத்தில் 459 படுக்கைகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அருகே இருக்கும் ரயில்பாதை வழித்தடத்திற்கு எளிதில் செல்லும் வகையில் வசதிகள் இருக்கும். புதிய இல்லம் 0.55 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்படும்.
சிங்கப்பூரின் முதலாவது சுகாதார மாவட்டமான குவீன்ஸ்டவுன் நகருக்குள் அமையும் 13.1 ஹெக்டர் நிலப்பரப்பில் அலெக்சாண்டிரா சுகாதார வளாகத்தின் ஒரு பகுதியாக புதிய இல்லம் அமையும்.
மிதமானது முதல் கடுமையான நினைவாற்றல் இழப்பு நோய் உள்ளவர்களைப் பேணும் வகையில் புதிய இல்லம் வடிவமைக்கப்படுகிறது.
புதிய இல்லத்தை 'கிராமிய சதுக்கம்' என்ற பசுமை இடம் சூழ்ந்து இருக்கும். சுகாதார அமைச்சு சென்ற மாதம் வெளியிட்ட ஏலக்குத்தகை ஆவணங்கள் மூலம் இவை தெரியவருகின்றன.
சிங்கப்பூரில் தாதிமை இல்ல படுக்கைகளின் எண்ணிக்கையை அடுத்த பத்து ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட அளவுக்கு அதிகமாக்க சுகாதார அமைச்சு திட்டமிடுவதாக இம்மாதத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
அலெக்சாண்டிரா மருத்துவமனையில் 2027ல் அமைய உள்ள புதிய இல்லத்திற்கு முன்னதாகவே 2025ஆம் ஆண்டில் ஏறக்குறைய 5,000 படுக்கைகளை உருவாக்கும் திட்டங்கள் அமைச்சிடம் உண்டு.
இந்த மருத்துவமனை மறு உருவாக்கத்தின் முதல் கட்டம் 2030 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று 2020ஆம் ஆண்டில் அப்போதைய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து இருந்தார்.
அதற்கு முன்னதாக அந்த இடத்திற்கான பாரம்பரிய ஆய்வு சென்ற ஆண்டு முதல் நடந்துவருவதாக அமைச்சு, இந்த மருத்துவமனை, தேசிய மரபுடைமைக் கழகம் ஆகியவற்றின் பேச்சாளர்கள் கூறியதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.