கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்
பாடுகளால் வெகுவாகப் பாதிப்
படைந்த 40,000க்கும் மேற்பட்ட சிறிய வர்த்தகங்களுக்கு கிட்டத்தட்ட $132 மில்லியன் பெறுமானமுள்ள மானியத்தை அரசாங்கம் கடந்த வாரம் ரொக்கமாக வழங்கியது.
மானியம் பெற்ற வர்த்தகங்களில் உணவு அங்காடி நிலையங்களில் உள்ள கடைகளும் சந்தைகளில் உள்ள கடைகளும்
அடங்கும். கடந்த பிப்ரவரி மாதம் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது சிறிய வர்த்தக மீட்பு மானியம் அறிவிக்கப்பட்டது. $500 மில்லியன் பெறுமானமுள்ள வேலை, வர்த்தக ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்
பாடுகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சிறிய வர்த்தங்களுக்கு ஒருமுறை ரொக்க உதவியாக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நேற்று தெரிவித்தன.
ரொக்க உதவி பெற்ற சிறிய வர்த்தகங்களில் சில்லறை வர்த்தகம், உணவு மற்றும் பானத்துறை, சுற்றுப்பயணத்துறை, உபசரிப்புத்துறை ஆகியவை அடங்கும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை பணிபுரிந்து, கட்டாய மத்திய சேமநிதிப்
பங்களிப்பு பெற்ற ஒவ்வொரு சிங்கப்பூர் அல்லது நிரந்தரவாசி ஊழியர் அடிப்படையில் மானியம் பெற தகுதி பெற்ற வர்த்தகங்களுக்குத் தலா $1,000 வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதிகபட்சம் $10,000 வழங்கப்
பட்டது. சிங்கப்பூர் உணவு அமைப்பின் உரிமம் பெற்ற சில வர்த்தக உரிமையாளர்கள், பங்காளிகள், உணவு அங்காடி நிலையக் கடைக்காரர்கள், சந்தை மற்றும் காப்பிக் கடைக்காரர்கள் ஆகியோர் அதே காலகட்டத்தில் ஊழியர்களை வேலையில் அமர்த்தாதபோதிலும் அவர்களுக்கு தலா $1,000
ரொக்கம் வழங்கப்பட்டது.
மானியத்துக்குத் தகுதி பெற நிறுவனங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அவை சிங்கப்பூரில் வர்த்தகம் செய்துகொண்டிருக்க வேண்டும்.
"வழங்கப்பட்ட மானியம் பெரும்பாலும் இழப்பின் ஒரு பகுதியை மட்டுமே ஈடுசெய்தது. இருப்பினும், பணப்புழக்கத்தை மீண்டும் ஏற்
படுத்தித் தர நிதியுதவி உதவியது. ஒன்றிணைந்து நெருக்கடிநிலையை எதிர்கொள்ள அரசாங்கம் கொண்டிருக்கும் அணுகுமுறையை இத்திட்டம் மறுஉறுதி செய்துள்ளது," என்று சிறிய நடுத்தர நிறுவனங்
களுக்கான சங்கத்தின் துணைத் தலைவர் ஆங் யுயிட் தெரிவித்தார்.
கடந்த ஆண்டிறுதி நில
வரப்படி, சிங்கப்பூரில் ஏறத்தாழ 280,000 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருவதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஊழியரணியில் 70 விழுக்காட்டினர் சிறிய, நடுத்தர நிறுவனங்
களில் பணிபுரிகின்றனர்.