கல்வி அமைச்சின் மூன்று புதிய பாலர் பள்ளிகள் தெங்கா, செங்காங், அங் மோ கியோ வட்டாரங்களில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகங்களில் அமையும்.
அவை 2026, 2027ஆம் ஆண்டுகளில் திறக்கப்படும்.
இவற்றையும் சேர்த்து கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை 60ஆக உயரும்.
பைனியர் தொடக்கப்பள்ளி 2026ல் தெங்கா வட்டாரத்திற்கு இடமாற்றம் செய்யப்படும்போது, அங்கு கல்வி அமைச்சின் பாலர் பள்ளி திறக்கப்படும்.
செங்காங் வட்டாரத்தில் உள்ள ரிவர்வேல் தொடக்கப்பள்ளியிலும் அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள டவுன்ஸ்வில் தொடக்கப்பள்ளியிலும் 2027ஆம் ஆண்டு புதிய பாலர் பள்ளிகள் திறக்கப்படும்.
ஒவ்வொரு பாலர் பள்ளியிலும் மாணவர்களுக்கு 120 முதல் 200 இடங்கள் ஒதுக்கப்படும்.
2026, 2027ஆம் ஆண்டுகளில் திறக்கப்படும் பாலர் பள்ளிகளுக்கு பதிவுசெய்ய விரும்புவோர் அப்பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டு பிப்ரவரியில் பதிவுசெய்துகொள்ளலாம்.
மேல் விவரங்கள் 2025, 2026ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் வெளியிடப்படும்.