நேற்றுக் காலை தெலுக் பிளாங்கா வட்டாரத்தில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் 11வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த புளோக்கில் இருந்து சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 92B தெலுக் பிளாங்கா ஸ்திரீட் 31ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு முற்பகல் 11.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்தவுடன், 11வது மாடியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தீ கொழுந்துவிட்டு எரிவதையும் அடர்த்தியான கரும்புகை வெளியேறுவதையும் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கவனித்தனர்.
அலெக்சாண்டிரா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், அந்த வீட்டிற்குள் நுழைந்து நீரைப் பீய்ச்சி அடிக்கும் கருவிகள் இரண்டைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீ விபத்தின் விளைவாக, வெப்பம் மற்றும் புகை வீடு முழுவதும் பரவியது. அங்கிருந்து ஒருவர் புகையை சுவாசித்தாரா என்பதை மருத்துவ உதவியாளர் ஒருவர் மதிப்பீடு செய்தார். அதன் பின்னர் மருத்துவமனைக்குச் செல்ல அந்த நபர் மறுத்துவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட புளோக்கில் இருந்து சுமார் 50 குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினர் வெளியேற்றினர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குடியிருப்பாளர்கள் பலர் தீ விபத்து பற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி எம்.பி. ரேச்சல் ஓங் கூறினார். பின்னர் அந்த புளோக்கிற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களையும் மற்ற குடியிருப்பாளர்களையும் தாம் சந்தித்ததாகவும் வீட்டின் உரிமையாளர் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பின்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திருவாட்டி ஓங், தீ விபத்து ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் விபத்தைப் பற்றி தெரிவித்துக்கொண்டதாகக் கூறினார்.
"குடியிருப்பாளர்கள் எப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என்பதை அவர்களால் உறுதியாகக் கூற முடியாததால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர் கொடுக்க நகர மன்ற உறுப்பினர்கள் முன்வந்தனர்," என்று அவர் கூறினார்.
மதியம் 2 மணியளவில், பாதிக்கப்பட்ட மாடியில் தங்கியிருப்பவர்களைத் தவிர மற்ற குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். நகர மன்ற ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு உதவியதாக திருவாட்டி ஓங் தெரிவித்தார்.