அப்துல் ரஹிம் ஷாபிஸ் என்ற குற்றவாளிக்கு வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
இந்நிலையில், அந்த குற்றவாளியின் சகோதரி ஒருவர், நீதிமன்ற விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்ய தான் முயன்றதாகவும் அதை சிங்கப்பூர் சிறைச்சாலை சேவைத் துறை அதிகாரிகள் வேண்டுமென்றே தடுத்துவிட்டதாகவும் இணையத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு கடிதத்தில் தெரிவித்தார்.
இதை அந்தச் சேவைத் துறை மறுத்து இருக்கிறது.
தன் சகோதரர் உட்பட, மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த கைதிகள் ஜூலை 25ஆம் தேதி சிறைச்சாலைத் துறை அதிகாரிகளிடம் நீதிமன்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்து இருந்ததாக அந்த மாது தெரிவித்தார்.
அந்த அதிகாரிகள், கைதிகளிடம் விண்ணப்பப் படிவங்களையும் மின்னணு படிவங்களையும் கேட்டு அதன் மூலம் அந்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய முடியாமல் தடுத்துவிட்டதாகவும் அந்த மாது குறிப்பிட்டார்.
இது உண்மையல்ல என்று சிறைச்சாலை சேவைத் துறை அறிக்கையில் நேற்று தெரிவித்தது.
மரண தண்டனை நிறைவேற்றப் படவிருந்த எந்தவொரு கைதியும் 2022 ஜூலை 25ஆம் தேதி எந்தவோர் அதிகாரியையும் அணுகி எந்தவொரு சட்டப்பூர்வ விண்ணப்பத்தையும் தாக்கல் செய்ய கோரவில்லை என அந்த அறிக்கை தெரிவித்தது.
மரண தண்டனை நிறை வேற்றப்பட இருந்த இரு கைதிகள் ஜூலை 28ஆம் தேதி சிறைச்சாலைத் துறை அதிகாரி ஒரு வருக்கு வேண்டுகோள் விடுத்ததாக அறிக்கை கூறியது.
வழக்குத் தொடுக்கும் மனுவை எப்படி விண்ணப்பிப்பது என்பதன் தொடர்பில் ஆலோசனை கூறும்படி அவர்கள் கேட்டுக்கொண்டதாக சிறைச்சாலை சேவைத் துறை தெரிவித்தது.