அமைச்சு: குற்றவாளிகளின் மரபணுத் தகவல் சேகரிப்பு விரிவுபடுத்தப்படும்
உள்துறை அமைச்சு குற்றவாளிகளின் மரபணுத் தகவல் சேகரிப்புத் திட்டத்தை விரிவுபடுத்தவிருக்கிறது. இம்மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் பதிவுச் சட்டம் மீதான திருத்தத்தின்கீழ் இந்த நடவடிக்கை அமையும்.
தென்கொரியா, தெற்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகியவற்றில் பின்பற்றப்படும் மரபணுத் தகவல் சேகரிப்பு நடைமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் சிங்கப்பூரின் சட்ட அமலாக்கத் திறன்களை வலுப்படுத்துவது நோக்கம்.
இதன்கீழ், காவல்துறை பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரின் ரத்த மாதிரிகள், எச்சில் மாதிரிகள் போன்றவற்றைச் சேகரிக்கும். சட்டவிரோதப் பின்தொடர்தல், குறும்புச் செயல்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற சம்பவங்களில் தொடர்புடையோரும் இவர்களில் அடங்குவர்.
உண்மையான குற்றவாளிகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவும் அப்பாவிகளைக் காப்பாற்றவும் மரபணுத் தகவல்கள் உதவுவதை அமைச்சு சுட்டியது.
குடியிருப்பு வட்டாரங்களில் மாபெரும் தேசிய தினக் கொண்டாட்டங்கள்
ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு குடியிருப்பு வட்டாரங்களில் தேசிய தினக் கொண்டாட்டங்கள் மீண்டும் கோலாகலமாக நடைபெற்றுள்ளன.
பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொண்டனர். மக்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை பிரதமரும் அங் மோ கியோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான லீ சியன் லூங் தொடங்கி வைத்தார். நுழைவுச்சீட்டுகளை வாங்கி மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
கரையோரப் பூந்தோட்டத்திலும் ஈராண்டுக்குப் பிறகு தேசிய தின இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏறக்குறைய 10,000 பேர் பங்கேற்றனர். கரையோரப் பூந்தோட்டம், மீடியாகார்ப் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பொங்கோல், செம்பவாங், போன விஸ்தா ஆகிய வட்டாரங்களிலும் தேசிய தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.