தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் (பிஎஸ்எல்இ) தோல்வி அடைந்து உயர்நிலைப் பள்ளியில் சேர இய லாத மாணவர்களுக்கான மாற்றுப் பள்ளிக்கூடமாக இரண்டு சிறப்புப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.
அந்தப் பள்ளிகளில் முன்னிலும் குறைவான மாணவர்களே சேர்கிறார்கள்.
பிறப்பு விகிதம் குறைவும் உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதி பெறுவோர் முன்னிலும் அதிகமாக இருப்பதும் இதற்கான காரணங்கள் என்பது தெரியவந்துள்ளது.
நார்த்லைட் பள்ளி, அசம்ஷன் பாத்வே பள்ளி என்ற அந்த இரண்டு பள்ளிக்கூடங்களும் 2007ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஏற்படுத்தப்பட்டன.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அந்தப் பள்ளிகளில் சேரலாம். அவை தொடங்கப்பட்ட பிறகு முதல் சில ஆண்டுகளில் அவை இரண்டும் ஆண்டுக்கு மொத்தமாக ஏறத்தாழ 400 மாணவர்களைச் சேர்த்துக்கொண்டன.
தொடக்கத்தில் நார்த்லைட் பள்ளி, இனி இடமில்லை என்று மாணவர்களைத் திருப்பிவிட்டது.
ஆனால் இரு பள்ளிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக சேரும் மாணவர்கள் எண்ணிக்கை சீராகக் குறைந்து இருக்கிறது.
இந்த ஆண்டில் நார்த்லைட் பள்ளி 185 பேரையும் அசம்ஷன் பாத்வே பள்ளி 122 மாணவர்களையும் சேர்த்துக்கொண்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது பற்றி விளக்கிய கல்வி அமைச்சின் பேச்சாளர், மக்கள் தொகை போக்கு காரணமாக ஒட்டுமொத்தமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஒரு காரணம் என்றார்.
உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதிபெறும் மாணவர்களின் விகிதாச்சாரமும் அதிகரித்து இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2011ல் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு எழுதிய மாணவர்களில் 97.4% மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதி பெற்றனர். இந்த விகிதம் 2016ல் 98.4% ஆகக்கூடியது.
காலவோட்டத்தில், பலதரப்பட்ட மாணவர்களுக்கு இடமளிக்கும் நோக்கத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிபந்தனைகளும் விரிவுபடுத்தப்பட்டு இருக்கின்றன.