சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் தொழில்முனைப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ளக் கைகொடுக்கும் இரண்டு புதிய திட்டங்களை நேற்று அறிவித்தது.
'டோலரம்' புத்தாக்க, தொழில்முனைப்பு அறநிதியின் ஆதரவில் பல்கலைக்கழகம் இந்தப் புதிய விருதுக் கல்வித் திட்டங்களை அறிவித்துள்ளது.
பட்டக் கல்வி, பட்ட மேற்படிப்பு என இருதரப்பு மாணவர்களும் இதற்குத் தகுதி பெறுவர். மாணவர்களின் தொழில்முனைப்புத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், அனைத்துலக வர்த்தகப் போக்கு குறித்த புரிதலுக்கும் இது உதவும்.
சிங்கப்பூர் பெருநிறுவனமான 'டோலரம்', சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் இரண்டும் சென்ற ஆண்டு புதிய அறநிதியை நிறுவின. நிறுவனம் இதற்கு 600,000 வெள்ளி வழங்கியது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இரண்டு விருதுகளுக்கும் மொத்தம் 32 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் எந்தத் துறையில் பயிலும் மாணவர்களும் இதற்குத் தகுதி பெறுவர் என்றும் அவர்கள் முழுநேர மாணவர்களாக இருப்பது அவசியம் என்றும் கூறப்பட்டது.
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் தொழில்முறைப் பயிற்சி எடுத்துக்கொள்ள இந்த விருதுகளில் ஒன்று வகைசெய்யும். அதற்கான முழுச் செலவும் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கு 12 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.
மற்றொரு விருதின்கீழ் 20 மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் வெள்ளி வழங்கப்படும். பள்ளி விடுமுறை நாள்களில் மாணவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்த இந்த விருது கைகொடுக்கிறது.