முன்னாள் மனைவியின் வீட்டைக் குறிவைத்து எரிபொருள் குண்டு வீசி சேதம் விளைவித்த ஆட
வருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாஜா மைமுனா கேட்டரிங் நிறுவனத்தின் பங்குதாரர்
களில் ஒருவரான 37 வயது இஸ்மாயில் டிடே இப்ராஹிம், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
இஸ்மாயிலும் அப்பெண்ணும் 2017ஆம் ஆண்டில் திருமணப் பந்தத்தில் இணைந்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர்கள் மணமுறிவு செய்துகொண்டனர். முன்னாள் மனைவியைப் பழிவாங்கும் நோக்குடன் 2020ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று தெலுக் குராவ் வட்டாரத்தில் அப்பெண்ணின் வீட்டிற்கு இஸ்மாயில் கார் ஓட்டிச் சென்றார்.
அப்போது அவரிடம் 'தின்னர்' திரவம் நிரப்பப்பட்ட போத்தலும் கறுப்புச் சாயத்தைப் பீய்ச்சியடிக்கும் சிறு கொள்கலனும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடையாளம் தெரியாமல் இருக்க மழை அங்கியை அவர் உடுத்திக்கொண்டார்.
இஸ்மாயில் தமது காரின் பின் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 'தின்னர்' போத்தலையும் கறுப்புச் சாயத்தையும் கலந்து, எரிபொருள்
தயாரித்தது அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
பிறகு மழை அங்கி அணிந்தவாறு தமது முன்னாள் மனைவியின் வீட்டை நோக்கி நடந்து
சென்றார்.
கடன்முதலைகள் செய்வதுபோல், 'கடன் வாங்கினால் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்ற வாசகத்தை சாயத்தால் அவர் அப்பெண்ணின் வீட்டுச் சுவரில் எழுதினார். அதையடுத்து, எரிபொருள் குண்டைப் பற்றவைத்து முன்னாள் மனைவியின் வீட்டை நோக்கி வீசினார். அந்தப் போத்தல் விழுந்து சிதறியபோது தீ மூண்டது. இஸ்மாயில் அவ்விடத்தை
விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அப்பெண்ணும் அவரது குடும்ப உறுப்பி னர்கள் வீட்டின் மேல் மாடியில் இருந்ததால் என்ன நடந்தது என அவர்களுக்குத் தெரியவில்லை.
ஆனால் தீ மூண்டதைப் பார்த்த அண்டைவீட்டுக்காரர் ஒருவர் தமது குடும்பத்தாருடன் சேர்ந்து அதை அணைத்தார்.
அதையடுத்து, அவர்கள் அப்பெண்ணிடம் தகவல் தெரிவித்தனர். காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. தீச்சம்பவம் காரணமாக இஸ்மாயிலின் முன்னாள் மனைவி யின் வீட்டுச் சுவர், தூண்கள் சேதம் அடைந்தன. அவருக்கு ஏறத்தாழ $6,000 இழப்பு ஏற்பட்டது.
இதை ஈடுசெய்யும் வகையில் தமது முன்னாள் மனைவியிடம் இஸ்மாயில் $5,000 கொடுத்துள்ளார். அப்பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க $3,000ஐ இஸ்மாயில் அறநிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இஸ்மாயில் வீசிய எரிபொருள் குண்டால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் அவரது முன்னாள் மனைவி மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு மனநல ஆலோச
கரின் சேவையை நாடும் நிலை ஏற்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு, பாதுகாப்பு உணர்வு இல்லாததால் அவரது குடும்பம் $600 செலவழித்து வீட்டைச் சுற்றி கண்காணிப்பு
கேமராக்களைப் பொருத்தியது.
இஸ்மாயில் நேற்று $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். சிறைத் தண்டனையைத் தொடங்க அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று அரசு நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.