ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அருகே கடலில் 24 வயது ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடலில் மூழ்கிவிட்டார் என்று நம்பப்படுகிறது.
எண், 920 ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கார் பேட்டை சி-1க்கு அருகே உதவி தேவைப்படுவதாக சனிக்கிழமை காலை 7 மணிஅளவில் தனக்குச் செய்தி கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த முகவரி, 'ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா ஒயிட் ஜெட்டி' படகுத்துறைக்கு அருகே திறந்தவெளி இடத்தில் உள்ள 'பார்க்லேண்ட் கிரீன்' என்ற பொழுதுபோக்கு இடம் அமைந்துள்ள பகுதியாகும்.
அதிகாரிகள் அங்கு சென்றபோது கடல் நீரில் ஓர் உடல் மிதந்தது. அதை மீட்புப்படையினர் மீட்டனர்.
அந்த ஆடவர் இறந்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படை மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனிடையே, தன் குடும்பத்தாருடன் மீன் பிடிப்பதற்காக அந்தப் பூங்காவுக்குச் சென்றிருந்த 60 வயது ஆடவர் ஒருவர், கடற்கரை ஓரமாக ஓர் உடல் மிதந்ததைத் தான் கண்டதாகவும் அருகே காவல்துறை அதிகாரிகளும் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் இருந்ததைத் தான் பார்த்ததாகவும் ஷின் மின் டெய்லி செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
மாண்ட அந்த ஆடவர் கடலில் விழுந்ததால் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை கூறியது. புலன்விசாரணை தொடர்வதாகவும் அது தெரிவித்தது.