ஹவ்காங் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹவ்காங் அவென்யு மூன்று புளோக் 2ல் உள்ள அந்த வீட்டில் 63 வயதான மாதுவின் உடல் மீட்கப்பட்டது. கடந்த மூன்று நாள்களாக அவர் வேலைக்கு செல்லாததால், அவருடைய சக ஊழியர் அவரை வீட்டில் பார்க்க வந்தபோது, சடலத்தை கண்டுபிடித்தார்.
மாண்டவர் ஹோங் என்று அழைக்கப்பட்டதாகவும் அவர் ஹவ்காங்கில் உள்ள ஒரு காபிக்கடையில் துப்புரவாளராக வேலை செய்துவந்ததாகவும் கூறப்பட்டது. அவருடைய மரணத்துக்கு ஒரு வாரம் முன்பு ஹோங்குக்கு ஆஸ்துமா மூச்சுதிணறல் ஏற்பட்டதாக அவருடைய சக ஊழியர் கூறினார். ஆனால் ஹோங் விடுப்பு எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். ஹோங்கின் மேற்பார்வையாளர் அவரை கட்டாயப்படுத்திய பின்னரே அவர் மூன்று நாள் விடுப்பு எடுத்ததாக கூறப்பட்டது.
மூன்று நாள்கள் கழித்து ஹோங் வேலைக்கு வராததால், அவர் வீட்டிற்கு சென்றுள்ளார் அவருடைய சக ஊழியர். வீட்டில் விளக்குகள் எறிந்துகொண்டிருந்தாகவும் வீட்டு கதவை பலமுறை தட்டியும் யாரும் திறக்கவில்லை என்றும் அவர் கூறினார். பாதி திறந்திருந்த சன்னல் வழியாக எட்டிபார்த்தபோது, ஹோங் தரையில் அசைவற்ற நிலையில் இருந்ததாக அவர் சொன்னார். அவர் வாயிலிருந்து நுரை வடிந்துகொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. உடனடியாக அவர் காவல் துறையினரை தொடர்புகொண்டார்.
ஹோங்கின் மரணம் இயற்கைக்கு மாறானது அல்ல என்று காவல் துறையினர் வகைப்படுத்தியுள்ளனர். விசாரணை தொடர்கிறது.