ஆயுதங்கள் ஏந்தி கலவரம் செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆக இளையவன் 13 வயதான சிறுவன்.
புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள லெங்கோக் பாருவில் செப்டம்பர் 2 அன்று ஒரு 15 வயது சிறுவன் கத்திகள் ஏந்திய ஒரு கும்பலால் தாக்கப்பட்டான். இந்த தாக்குதலின் தொடர்பில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செப்டம்பர் 2 அன்று இரவு சுமார் 8.45 மணியளவில் சம்பவம் குறித்து காவல் துறைக்கு அழைப்பு கிடைத்தது. முன்பு நடந்த ஒரு தகராறு காரணமாக கும்பல் சிறுவனை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. சிறுவனின் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டான்.
இதன் தொடர்பில் ஒரே வாரத்தில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் எட்டு பேர் பதின்ம வயதினர். சந்தேக நபர்களில் ஒருவருக்கு 24 வயது. அனைவரும் ஆடவர்கள் என காவல் துறையினர் குறிப்பிட்டனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
அபாயகரமான ஆயுதங்கள் ஏந்தி கலவரம் புரிந்ததாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.