'கட்டமைப்பு' தொடர்பான மக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் கருத்து
சிங்கப்பூர் தன்னுடைய வருங்கால தலைமுறையினருக்காக நிலத்தையும் வளங்களையும் போதிய அளவுக்குப் பாதுகாத்து வைக்கிறது.
அதேவேளையில், வரும் ஆண்டுகளில் மக்களுக்கு வீடுகளை வழங்கவும் அது திட்டமிடுகிறது.
இந்த நிலையில், பொது வீடமைப்பு தொடர்பான சிங்கப்பூரர்களின் விருப்பங்களை, கவலைகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
அதோடு, சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப வீடுகள் தொடர்பில் சிங்கப்பூரர்களிடம் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடுகளும் எப்படி பரிணமிக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார் அவர்.
மேக்ஸ்வெல் ரோட்டில் உள்ள யுஆர்ஏ சென்டரில் நேற்று நடந்த பொதுமக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பேசினார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த ஜூன் மாதம் புதிய சமூகக் கட்டமைப்பான 'முன்னேறும் சிங்கப்பூர்' என்ற இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
அந்த இயக்கத்தின் ஆறு தூண்களில் 'கட்டமைப்பு' என்பது ஒரு தூணாகும். கட்டமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்கள் நேற்று தொடங்கின. அதில் பொதுமக்கள் 180 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களிடம் உரையாற்றிய அமைச்சர், நம் கடமைகள், பொறுப்புகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி பேச வேண்டியது உண்மையிலேயே மிக முக்கியமானது என்றார்.
"அவை நாம் நம்முடைய வளங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான வழியைக் காட்டும்.
"பிறகு நம்முடைய வீடமைப்புக் கொள்கைகளை முழுமையாக உருவாக்கும் வழியாகவும் சிங்கப்பூரின் நிலப் பயனீட்டுக்குத் திட்டமிடும் வழியாகவும் அவை இருக்கும்.
"அவை எல்லாம் வழியில் மாற்றத்திற்கான காரணங்களாகவும் திகழும்," என்றார் அவர்.
"சிங்கப்பூர் வீடமைப்புக் கொள்கை என்பது சமூகக் கொள்கையாக இருக்கிறது என்பதே இதற்கான காரணம். அத்தகைய கொள்கை கள், வெறும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் கவனத்தைச் செலுத்தாமல் சமூகம், மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன," என்றார் அவர்.
சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை வீடு என்பது முக்கியமான ஓர் அம்சம் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக கூறிய திரு லீ, கட்டுமான தாமதங்கள், வீவக வீடுகளுக்குக் காத்திருக்கும் நேரம், வீட்டு விலை தாக்குப்பிடிக்கும் அளவில் இருக்குமா போன்றவை மக்கள் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்து இருப்பதாகத் தெரிவித்தார்.
உடனடி சவால்களைச் சமாளிக் கும் வகையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், கட்டுமான தாமதங்களைக் குறைத்து வருகிறது. வீடுகள் விரைவாக கிடைக்க அது முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளது. 2021 முதல் 2025 வரை 100,000 புதிய வீடுகளை விற் பனைக்குக் கொடுப்பது அதன் இலக்காக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து சொத்துச் சந்தையை அணுக்கமாகக் கண்காணித்து, அது நிலையாக, கட்டிக்காக்கக் கூடிய வகையில் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்.
வீடமைப்பு தொடர்பான நம் சமூகக் கோட்பாடு, நிலையான ஒன்று அல்ல. நிலையாக அது இருந்ததும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை. சூழ்நிலை மாறும்போது, சமூகம் பரிணமிக்கும்போது அதற்கேற்ப நம் கொள்கைகளும் தொடர்ந்து பரிணமித்து வரவேண்டும் என்றார் அமைச்சர்.
நேற்றைய நிகழ்ச்சியைப் போல டிசம்பர் வரை கிட்டத்தட்ட 20 நிகழ்ச்சிகளும் சாலைக்காட்சிகளும் நடக்கவிருக்கின்றன.
சாலைக்காட்சிகள் உட்லண்ட்ஸ் சிவிக் சென்டரில் அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும். பிறகு 'அவர் தெம்பனிஸ் ஹப்', தோ பாயோவில் உள்ள வீவக மையம் ஆகியவற்றில் நடக்கும். பொது வீடமைப்பு பற்றி பொதுமக்களின் கருத்துகள், யோசனைகளைத் திரட்டுவதற்காக அக்டோபர் 8 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை கருத்தெடுப்பு நடக்கும்.