சொகுசு ஹோட்டல் குழுமமான ஷங்கிரி-லாவின் தரவுத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளன.
அதனால் சிங்கப்பூர், ஹாங்காங், சியாங்மாய், தைப்பே, தோக்கியோ ஆகிய நகரங்களில் உள்ள ஷங்கிரி-லா ஹோட்டல்களில் வசித்தோரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மே, ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஊடுருவல் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்தது.
அந்தக் காலகட்டத்தில்தான் ஆசியாவின் ஆக உயரிய பாதுகாப்பு மாநாடான ஷங்கிரி-லா சந்திப்பு மீண்டும் சிங்கப்பூரில் நடைபெற்றது.
கொள்ளைநோய்ப் பரவலால் சந்திப்பு ஈராண்டுகளாக நடைபெறவில்லை.
ஆரஞ்சு குரோவ் சாலையில் உள்ள ஷங்கிரி-லா ஹோட்டலில் இவ்வாண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதியவரை சந்திப்பு நடைபெற்றது.
ஊடுருவல் இடம்பெற்றபோது ஹோட்டல் விருந்தினரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று ஷங்கிரி-லாவின் செயல்பாட்டு, செயல்முறை உருறுமாற்றப் பிரிவின் மூத்த துணைத் தலைவரான பிரையன் யூ தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தாங்கள் மிகவும் வருத்தப்படுவதாகவும் இதன் தொடர்பில் விசாரணை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்க உறுதியளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட விருந்தினருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் திரு யூ குறிப்பிட்டார்.
விருந்தினரின் கடவுச்சீட்டு எண்கள், அடையாள எண்கள், பிறந்தநாள், கடன் அட்டை எண்கள் போன்ற விவரங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக அவர் விருந்தினர்களுக்கு உறுதியளித்தார்.