குவாங் வாய் ஷு மருத்துவமனை நேற்று தனது இரண்டாவது தாதிமை இல்லத்தை பொத்தோங் பாசிரில் திறந்தது.
அங்கு வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான முதியோரின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் அது திறக்கப்பட்டு இருக்கிறது. அத்தகைய முதியவர்களில் பலருக்குத் தாதிமை, பகல்நேர பராமரிப்பு போன்ற சேவைகள் அதிகம் தேவைப்படுகின்றன.
அந்தச் சேவைகளைப் புதிய தாதிமை இல்லம் வழங்கும் என்று இந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஓவ் சீ சுங் கூறினார். நினைவிழப்புக் குறைபாடு உள்ளோரைப் பராமரிப்பதில் சிறப்பு ஆற்றலை புதிய தாதிமை இல்லம் கொண்டிருக்கும்.
அது, பொது மருத்துவமனைகளில் இருந்து அத்தகைய நோயாளிகளைப் பெற்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் என்று மருத்துவமனையின் தலைவரான பேட்ரிக் லீ நேற்றைய புதிய இல்ல திறப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த தாதியர்கள், அந்தப் புதிய இல்லத்தைச் சேர்ந்த ஊழியர்களுடன் சேர்ந்து செயல்பட்டு முதியவர்களை எப்படி எல்லாம் கவனித்துக்கொள்வது என்பதன் தொடர்பில் பயிற்சி அளிப்பார்கள். இந்தப் பயிற்சி 2023 ஜனவரி வரை நடக்கும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
குவாங் வாய் ஷு மருத்துவமனையின் 112ஆவது ஆண்டுவிழாவுடன் சேர்ந்து அமையும் வகையில் புதிய இல்லம் திறக்கப்பட்டுள்ளது.
புதிய தாதிமை இல்லத்தில் 438 படுக்கைகள் உள்ளன. அவற்றையும் சேர்த்து இந்த மருத்துவமனையின் ஆறு முதியோர் பராமரிப்பு நிலையங்களில் மொத்தம் 1,200 இடங்கள் இருக்கும்.
இந்த மருத்துவமனையின் மற்றொரு தாதிமை இல்லம் சிராங்கூன் சாலையில் செயல்படுகிறது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்றைய புதிய இல்லத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மருத்துவமனைகளின் சுமைகளைக் குறைக்க இந்தப் புதிய தாதிமை இல்லம் உதவுகிறது. இதன்வழி கொவிட்-19க்கு எதிரான தேசிய போராட்டத்தில் இந்த இல்லம் புதிய ஊக்குவிப்பை வழங்குகிறது என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. அதைச் சமாளிப்பதில் நீண்ட நெடுங்காலம் இந்தப் புதிய இல்லம் உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அருகே இருக்கும் செயின்ட் ஆண்ட்ருஸ் வில்லேஜில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு கேளிக்கை விளையாட்டுகள், வெளிப்புறப் பெருநடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இளையோரையும் முதியோரையும் புதிய பொத்தோங் பாசிர் தாதிமை இல்லம் ஈடுபடுத்துகிறது.