'முன்னேறும் சிங்கப்பூர்' திட்டத்தின் ஒரு பகுதியாக இங்குள்ள இளையர்களுக்கு ஏறக்குறைய 3,000 புதிய தொண்டூழிய வாய்ப்புகள் கிடைக்கவிருக்கின்றன.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைக்கவிருக்கும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுற்றுப்புறப் பாதுகாப்பு, முதியோருக்கு உதவு வது போன்ற பல்வேறு அம்சங்களில் அவர்கள் தொண்டூழியத்தில் ஈடுபடலாம்.
வேலையிடத்தில் பாரபட்சமான நடைமுறைகள், அப்போதைக்கு அப்போது இடம்பெறக்கூடிய இனவாதப் பிரச்சினைகள் போன்ற உணர்வுபூர்வமான இன, சமய விவகாரங்கள் பற்றிய விவாதங்களின்போது ஆதரவு தரும் பல்வேறு வகை தகவல் அட்டைகள் அடங்கிய ஒரு கோப்பும் நவம்பர் மாதவாக்கில் கிடைக்கும்.
சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்புக்குப் புத்துயிர் அளிக்க இடம்பெறும் முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின் ஒரு பகுதியாக இவை எல்லாம் இடம்பெறுகின்றன.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று இதனை அறிவித்தார்.
கொவிட்-19 தொற்றுக் காலத்தில் சிங்கப்பூரர்கள் வெளிப்படுத்திய பெருந்தன்மையும் கருணை உணர்வும் இங்குள்ள சமூகங்களில் தொடர்ந்து நிலவி வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
'நம் சிங்கப்பூர் தலைமைத்துவச் செயல்திட்டம்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நிறைவு நாளில் நேற்று அவர் பேசினார்.
தலைமைத்துவ நிலைகளில் உள்ள இளம் சிங்கப்பூரர்கள் தேசிய பிரச்சினைகளைப் பற்றி புரிந்துகொள்ளவும் கொள்கைகளை உருவாக்கும்போது கவனத்தில் கொள்ளப்படுகின்ற அம்சங்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும் உதவும் நோக்கத்தில் அந்தச் செயல்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
தேசிய இளையர் மன்றம் ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நான்கு நாள்கள் நடந்தது.
அவற்றில் கிட்டத்தட்ட 50 பேர் கலந்துகொண்டனர்.
சிரமமான தலைப்புகள் தொடர்பான கலந்துரையாடல்களில் இளையர்களை ஈடுபடச் செய்வதோடு எல்லாரையும் உள்ளடக்கும் தன்மையையும் மேம்படுத்தும் வகையில் மின்னிலக்க இயக்கம் ஒன்று அக்டோபர் முதல் வரும் ஜனவரி வரை இடம்பெறும்.