சிங்கப்பூரின் மலாய்/முஸ்லிம் சமூகம் மாபெரும் முன்னேற்றம் கண்டு உள்ளது. என்றாலும் அது மேலும் முன்னேற இப்போது இலக்கு நிர்ணயித்துச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
அந்தச் சமூகத்தின் விருப்பங்களும் தேவைகளும் கூடி இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இருந்தாலும் அந்தச் சமூகத்தின் ஒரு பிரிவினர் இன்னமும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார்.
இதன் விளைவாக யாயாசான் மெண்டாக்கி சுயஉதவிக் குழுவின் பணி கூடி இருப்பதாக அவர் கூறினார். மெண்டாக்கியின் 40வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பேசிய திரு லீ, மெண்டாக்கி ஒருமித்த கவனம் செலுத்த வேண்டிய மூன்று அம்சங்களை அறிவித்தார்.
பாலர் பருவ பிள்ளைகளுக்கான ஆதரவு, குடும்ப, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது, ஊழியரிடையே வாழ்நாள் கற்றலை மேம்படுத்துவது ஆகியவை அந்தத் துறைகள் என்றார் திரு லீ.