கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்துவது குறித்து பாதிக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டப்படி அனுமதிப்பதை 53 விழுக்காடு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஆதரிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கஞ்சாவை எந்தவொரு காரணத்திற்கும் சட்டப்படி அனுமதிப்பதை 35 விழுக்காட்டினர் எதிர்த்தனர். எஞ்சிய 12 விழுக்காட்டினர் கஞ்சாவை மருத்துவத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் சட்டப்படி அனுமதிக்கலாம் என்று கருதுகின்றனர்.
தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் நடத்திய ஆய்வில் இந்த கருத்துகள் தெரியவந்தன. வெவ்வேறு வயதினரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளும் இந்த ஆய்வில் தெரியவந்தது. கஞ்சாவை மருத்துவத்திற்காக ஆதரிப்போரில் 59 விழுக்காட்டினர் 16 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஒப்புநோக்க 55 வயதுக்கும் அதிகமானோரில் 44 விழுக்காட்டினர் மட்டுமே இதை ஆதரித்தனர்.
சிங்கப்பூரில் கஞ்சாவை மருத்தவ சிகிச்சைக்காக பயன்படுத்துவது மிக அரிது. 2019லிருந்து இருவருக்கு மட்டுமே கஞ்சாவிலிருந்து தருவிக்கப்பட்ட மருந்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.