சிங்கப்பூரில் உள்ள அரசாங்க சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் ஒவ்வோர் ஆண்டும் வேலைக்கு சேர்க்கப்படும் இளைய மருத்துவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் சிங்கப்பூரர்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுமங்களின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதைத் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவர்களை சிங்கப்பூரில் வேலைக்கு அமர்த்துவதன் தொடர்பில் இணையத்தில் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, நிறுவனம் விளக்கம் தந்தது.
சிங்கப்பூரில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் பட்டம்பெற்றவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த சிங்கப்பூர் மருத்துவர்கள் குழுமங்களில் வேலைக்குச் சேர்க்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்திய மருத்துவர்களைப் பணியில் சேர்க்கும் சேவைகளை வழங்கும் குத்தகையில் பங்கேற்கும்படி ஊழியர்சேர்ப்பு நிறுவனங்களுக்கு கடந்த 6ஆம் தேதி எம் ஓஎச் ஹோல்டிங்ஸ் அழைப்பு விடுத்திருந்தது.
சமூக ஊடகத்திலும் தி ஓன்லைன் சிட்டிஸன் இணையத்தளத்திலும் அது குறித்து பேசப்பட்டது.
உள்ளூர் மருத்துவர்களை வேலைக்குச் சேர்க்கும் நடவடிக்கைகள் பற்றியும் சில இந்திய மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் ஆகியோர் மோசடி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும் அவை அக்கறை தெரிவித்தன.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிலும் கடிதம் வெளிவந்தது.
எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர், சிங்கப்பூரின் அரசாங்க மருத்துவ நிலையங்களின் தேவைகளைச் சமாளிக்க ஒவ்வோர் ஆண்டும் 700 இளம் மருத்துவர்கள் பணியில் சேர்க்கப்படுவதாகக் கூறினார்.
வேலைக்கு சேர்க்கும் உள்நாட்டு மருத்துவர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.