ஆட்டிசம் குறைபாடு உள்ள பெரியவர்களுக்கு புதிய உடன்பாடு மூலம் உற்சாகம்
ஐஎச்எச் சுகாதாரப் பராமரிப்பு சிங்கப்பூர் அமைப்பின் நிறுவனத் திட்டப் பிரிவில் பணியாற்றும் 22 வயது வில்லியம் லோ, நோயாளியின் பதிவுகளில் ஏதேனும் தவறுகள் உள்ளதா என்று சோதிப்பார். ஆட்டிசம் குறைபாடு உள்ள அவருக்கு அமைதியான அலுவலக சூழல் பிடிக்கும். அப்போதுதான் தனது வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும் என்று கூறுகிறார்.
ஐஎச்எச் சிங்கப்பூர் அமைப்பும் லாபநோக்கமற்ற அமைப்பான ஆட்டிசம் வளநிலையமும் 2019ல் செய்துகொண்ட உடன்பாட்டின் விளைவாக சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வேலை கிடைத்த ஆட்டிசம் குறைபாடுடைய 15 பெரியவர்களில் திரு லோவும் ஒருவர்.
மேற்கூறப்பட்ட இரு அமைப்புகள் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய உடன்பாட்டில் நேற்று கையெழுத்திட்டதன் மூலம் மருத்துவமனையில் பணியாற்றும் ஆட்டிசம் குறைபாடுடைய ஊழியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது.
அதன் வழி, ஆட்டிசம் உள்ளவர்கள் தகுந்த பயிற்சிகளை பெற்று, அவர்களின் திறனுக்கேற்ப ஐஎச்எச் சிங்கப்பூர் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள்.
"அப்படி என்றால் இன்னும் அதிகமான வேலைகள் ஆட்டிசம் உள்ளவர்களுக்குக் காத்திருக்கின்றன," என்றார் ஆட்டிசம் வளநிலையத்தின் நிர்வாக இயக்குநர் ஜெஸ்லின் லிம்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனியார் சுகாதாரப் பராமரிப்பு வழங்கு நரான ஐஎச்எச் மவுண்ட் எலிசபெத் ஆர்ச்சர்ட், நொவினா உட்பட நான்கு மருத்துவமனைகளை நிர்வகிக்கிறது.
"சுகாதாரப் பராமரிப்புத் துறையில் எங்களின் ஊழியர் எண்ணிக்கை மிகக் குறைவு. இரு வகையான ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர். முன்களப் பணியாளர்கள். கட்டணப் பட்டியலைத் தயார் செய்வது, நோயாளிப் பதிவுகளை நிர்வகிப்பது என பின்னணியில் இருந்து வேலை செய்ய பலர் தேவைப்படுகின்றனர்," என்றார் ஐஎச்எச் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி டாக்டர் பிரேம் குமார் நாயர்.
ஐஎச்எச் சிங்கப்பூர் அமைப்புக்கும் ஆட்டிசம் வளநிலையத்கும் இடையிலான உடன்பாடு நேற்று லெங்கோக் பாருவில் உள்ள எனேபலிங் வில்லேஜ்ஜில் அதிபர் ஹலிமா யாக்கோப் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த உடன்பாட்டின் மூலம் ஆட்டிசம் வளநிலையம் இப்போது ஆட்டிசம் உள்ள இன்னும் அதிகமான தனிநபர்களுக்குத் தேவையான பயிற்சியளித்து, அவர்களை சுகாதாரப் பராமரிப்பு வேலைகளுக்குத் தயார்ப்படுத்தும்.
இரண்டு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைகளும் இணைந்து ஆட்டிசம் வளநிலையத்துக்கு $100,000 நன்கொடை அளித்தன.