சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள்: மறுவிற்பனை வீடு வாங்குவோர் அவசரம்
முதலில் அதிர்ச்சி, பின்னர் மறுவிற்பனை வீடு வாங்குவதில் புதிய சவால்களை எதிர்கொள்ள பெரும் அவசரம். தனியார் சொத்துகளின் உரிமையாளர்கள் அவற்றை விற்றுவிட்டு, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக)மறுவிற்பனை வீடு வாங்கும் தங்கள் திட்டத்தை உடனடியாகக் கைவிடும் நிர்பந்தத்துக்கு ஆளாகி உள்ளனர். பொது வீடமைப்புச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தப் பதற்றம் நிலவுகிறது.
தங்கள் தனியார் சொத்துகளை ஏற்கெனவே விற்று, இன்னும் வீவக மறுவிற்பனை வீடு வாங்காதவர்கள், இப்போது இடைக்காலத் தீர்வாக வாடகை வீட்டில் வசிக்கும் இக்கட்டில் மாட்டிக்கொண்டுள்ளனர். தனியார் சொத்துகளை விற்று, வீவக மறுவிற்பனை வீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 15 மாதம் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்பது அறிவிக்கப்பட்ட மாற்றங்களில் மற்றொன்று.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், தனியார் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் தனியார் சொத்தை விற்றதில் இருந்து, கட்டணக் கழிவில்லா வீவக மறுவிற்பனை வீடு வாங்குவதற்கு 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இது ஒரு
தற்காலிக நடவடிக்கைதான் என்றும் ஒட்டுமொத்த தேவையைப் பொறுத்தும் சந்தை மாற்றங்களுக்கு ஏற்பவும் புதிய நடவடிக்கைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் தெரிவித்தன.
மருத்துவ பயன்பாட்டில் கஞ்சா:
53 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் ஆதரவு
கஞ்சாவை மருத்துவத்திற்காகப் பயன்படுத்துவது குறித்து பாதிக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டப்படி அனுமதிப்பதை 53 விழுக்காடு சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் ஆதரிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கஞ்சாவை எந்தவொரு காரணத்திற்கும் சட்டப்படி அனுமதிப்பதை 35 விழுக்காட்டினர் எதிர்த்தனர். எஞ்சிய 12 விழுக்காட்டினர் கஞ்சாவை மருத்துவத்திற்காகவும் பொழுது போக்கிற்காகவும் சட்டப்படி அனுமதிக்கலாம் என்று கருதுகின்றனர்.
தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் நடத்திய ஆய்வில் இந்தக் கருத்துகள் தெரியவந்தன. வெவ்வேறு வயதினரி டையே உள்ள கருத்து வேறுபாடுகளும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தன. கஞ்சாவை மருத்துவத்திற்காகப் பயன்படுத்துவதை ஆதரிப்போரில் 59 விழுக்காட்டினர் 16 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஒப்புநோக்க 55 வயதுக்கும் அதிகமானோரில் 44 விழுக்காட்டினர் மட்டுமே இதை ஆதரித்தனர்.
சிங்கப்பூரில் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்துவது மிக அரிது. 2019லிருந்து இருவருக்கு மட்டுமே கஞ்சாவிலிருந்து பெறப்பட்ட மருந்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
ஸ்ரீ முருகன் பேரங்காடியில் கைகலப்பு
ஈஸ்ட் பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள ஸ்ரீ முருகன் பேரங்காடியில் கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பேரங்காடியில் உள்ள பொருள் வைக்கும் அடுக்கு மேடைகள் புரட்டி போடப்பட்டன. கடை முழுவதும் பொருள்கள் சிதறின (படம்).
இந்தச் சம்பவம் குறித்து ஷின்மின் நாளிதழுக்கு வாசகர் ஒருவர் மூலம் தகவல் கிடைத்தது. கடையில் இரு ஆடவர்கள் சண்டை போட்டுகொண்டிருந்ததாகவும், அதில் ஒருவர் கோபமடைந்து பொருள்கள் வைக்கப்படும் அடுக்கு மேடைகளைக் கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது. கிட்டத்தட்ட 10 அடுக்கு மேடைகள் கீழே தள்ளப்பட்டு தரை முழுவதும் பொருள்கள் சிதறி கிடந்ததாக ஷின்மின் நாளிதழ் குறிப்பிட்டது.
சம்பவம் குறித்து காவல் துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதியன்று இரவு ஏழு மணியளவில் அழைப்பு கிடைத்த தாகக் கூறப்பட்டது. மது அருந்திவிட்டு பொது இடத்தில் தொந்தரவு கொடுத்ததற்கும், வன்முறையை பயன்படுத்த மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக 31 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அந்த நபர் ஸ்ரீ முருகன் பேரங்காடியின் ஊழியர் என அறியப்படுகிறது. அவர் வேலை நேரத்தில் மது அருந்தியதாகவும் சக ஊழியருடன் சண்டை போட்டதாகவும் நம்பப்படுகிறது. அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஷின்மின் நாளிதழ் தகவல் அளித்தது. காவல் துறையின் விசாரணை தொடர்கிறது.