சிங்கப்பூரில் உள்ள அரசாங்க சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் ஒவ்வோர் ஆண்டும் வேலைக்கு சேர்க்கப்படும் இளைய மருத்துவர்களில் 90%க்கும் மேற்பட்டவர்கள் சிங்கப்பூரர்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுமங்களின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் அமைப்பு இதைத் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவர்களை சிங்கப்பூரில் வேலைக்கு அமர்த்துவதன் தொடர்பில் இணையத்தில் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, நிறுவனம் விளக்கம் தந்தது. சிங்கப்பூரில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் பட்டம்பெற்றவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த சிங்கப்பூர் மருத்துவர்கள், குழுமங்களில் வேலைக்குச் சேர்க்கப்படுவதாகக் கூறப்பட்டது.
இந்திய மருத்துவர்களைப் பணியில் சேர்க்கும் சேவைகளை வழங்கும் குத்தகையில் பங்கேற்கும்படி ஊழியர்சேர்ப்பு நிறுவனங்களுக்கு கடந்த 6ஆம் தேதி எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் அழைப்பு விடுத்திருந்தது. சிங்கப்பூரின் அரசாங்க மருத்துவமனைகளின் தேவைகளைச் சமாளிக்க ஒவ்வோர் ஆண்டும் 700 இளம் மருத்துவர்கள் பணியில் சேர்க்கப்படுவதாக அமைப்பின் பேச்சாளர் கூறினார்.