பேசும் சித்திரம்வழி தழைக்கட்டும் தமிழ்மொழி
தமிழ்மொழியை இளையர்களுக்குப் புத்தாக்க வடிவில் கொண்டுசெல்ல வேண்டும் என 27 வயது ராம் பிரசாத் செல்வராஜ் விரும்புகிறார். கடந்த ஈராண்டுகளாக தனது இன்ஸ்டகிராம் சமூக ஊடகத் தளத்தில் கேலிச்சித்திர, திரைப்படக் கதாபாத்திரங்கள் போன்றவற்றை வரைந்து பதிவு செய்து வருகிறார் இவர். இவரின் பெரும்பாலான மின்னிலக்க வரைகலைப் படைப்புகளில் தமிழ் சார்ந்த அம்சங்கள் அடங்கும்.
பாலர் பருவத்திலிருந்து தன் தாயாரின் கதைகளைக் கேட்டு வளர்ந்த இவர், தான் கேட்ட கதைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் வரையத் தொடங்கினார். வரைகலை மீதும் தமிழ்மொழி மீதும் ஆர்வம் அதிகரிக்க, திரைப்படக் கதாநாயகர்களையும் கேலிச்சித்திர கதைமாந்தரையும் வரையும்போது இடையிடையே தமிழ் பழமொழிகளையும் தமிழில் உள்ள தொடர்கள், எழுத்துகளையும் இணைக்க ஆரம்பித்தார் ராம்.
"இளையர்களுக்கு நம் தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் புரியவைப்பது முக்கியம். தமிழ்மொழிப் புழக்கத்தை நம் அன்றாட வாழ்க்கையில் குறைத்துக்கொண்டால், நம் மொழி மறைந்துவிடுமோ என்ற அச்சம் என்னுள் எழுந்தது. எனவே, இளையர்களைச் சென்றடைவதில் எனது கவனத்தைச் செலுத்தினேன்," என்று கூறுகிறார் ராம்.
இளையர்கள் மத்தியில் பிரபலமான கேலிச்சித்திரங்களைத் தமிழ் தொடர்
களுடன் இணைத்து படைக்கும்போது அவற்றை அந்த இளையர்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அது அமைகிறது. மேலும், தன் படைப்புகள் இளையர்களைத் தமிழில் வாசிக்கவும் பேசவும் தூண்டும் என ராம் நம்புகிறார்.
"தமிழில் ஆர்வமுடைய இளையர்களுடன் இணைந்து 2019ஆம் ஆண்டில் 'அத்தியாயம்' என்ற நாடகத் தயாரிப்பிற்காக தமிழில் முதல்முறையாக எழுதினேன். அந்த அனுபவத்தின் மூலம் நான் நிறைய அடிப்படைத் திறன்களைக் கற்றுக்கொண்டேன். நான் கேலிச்சித்திரங்களுக்காக எழுதுவதற்கு அந்த அனுபவமே
கைகொடுத்தது," எனத் தனது பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார் ராம்.
"எனக்கு வரைகலையில் மிகுந்த ஆர்வம் இருந்தபோதும் என் வயதுடைய மற்ற மாணவர்களின் திறன்களுடன் ஒப்பிடுகையில் எனது திறன் போதாது என எனக்குத் தோன்றியது. என் திறன்களை மேம்
படுத்தும் முயற்சியில் நான் தினமும் வரையத் தொடங்கினேன். காலப்போக்கில், நான் நிறையக் கற்றுக்கொண்டேன். என் படைப்புகளின் தரமும் மேம்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.
தன் கலைப்பயணத்திற்குத் தன்னுடைய நண்பர்களே பெரும் தூண்டுகோலாக இருந்ததாக ராம் கூறுகிறார்.
"என் நண்பர்கள் என் திறனை மனத்தில் கொண்டு எனக்கு ஒரு ஸ்கேனரைப் பரிசளித்தனர். அதைப் பயன்படுத்தி நான் காகிதத்தில் வரைந்தவற்றை மின்னிலக்க நகலெடுத்து படங்களுக்கு வண்ணங்கள் சேர்க்கிறேன்," என்று ராம் கூறினார்.
புதிய நம்பிக்கையுடன் தனக்கென ஓர் இன்ஸ்டகிராம் பக்கத்தைத் தொடங்கி படிப்படியாக மின்னிலக்கத் திறனுடன் வரையக் கற்றுக்கொண்டார். ஓர் ஐபேட், ஆப்பிள் பேனா ஆகியவற்றில் முதலீடு செய்து, இன்று நேரடியாகவே அதில் தனது படைப்புகளை வரைந்து பதிவு செய்கிறார்.
வரைகலைத் துறையில் ஆர்வமுள்ள இளையர்கள், தங்களின் திறனை மேம்
படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும். வரைகலைத் துறையை வளர்க்க பாடுபட வேண்டும் என ராம் கருதுகிறார்.
இனி வரும் ஆண்டுகளில், இரு
மொழிக் கல்வியை ஆதரிக்கும் வகையில் சுவாரசியமான கேலிச்சித்திரக் கதைகளை ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் இளையர்களை ஈர்க்கும் வண்ணம் எழுதி வெளியிட வேண்டும் என்னும் இலக்கையும் ராம் கொண்டுள்ளார். @raamster_art இணைப்பின்வழி இவர் படைப்புகளைக் காணலாம்.