நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் நமது பிறந்தநாள் கொண்டாட்டம், பட்டமளிப்பு விழா, திருமண நாள் போன்றவற்றில் இல்லாததுயரத்தை உணர்ந்து தன் கற்பனைத் திறத்தால் மின்னிலக்க வரைகலைவழி அவர்களை நம் கண்முன்னே கொண்டு
வருவதில் 24 வயது பிரீத்திக்கா
செல்வகுமார் கைதேர்ந்தவராக விளங்குகிறார். முக்கிய நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மறைந்தவர்களைச் சேர்த்து வரைந்து வருகிறார் பிரீத்திக்கா. சிறுவயதிலிருந்தே ஓவியக்கலை மீது அவருக்கு ஆர்வம். கடந்த ஆண்டு தந்தையின் பிறந்தநாளுக்குத் தன் சகோதரி பரிசளித்த 'ஐபேட்' மூலம் பிரீத்திக்காவின் கலைப் பயணம் சுவாரசியமானது.
தந்தையிடமிருந்து சாதனத்தை இரவல் பெற்றுக்கொண்டு என்னென்ன செயலிகள் அதில் உள்ளன என ஆராய்ந்தார் பிரீத்திக்கா. பின்னர், 'ப்ரோகிரியேட்' மின்னிலக்க வரைகலைச் செயலி அவரின் ஆற்றலை வெளிப்படுத்த உதவியது.
சட்டத்துறையில் இறுதியாண்டு மாணவியாகப் பயிலும் இவருக்கு, இந்தத் திறன் பின்னாளில் ஒரு பகுதிநேர வர்த்தகமாகவே மாறியது. உள்ளூர் கலைஞர்களையும் வரைந்து, சமூக ஊடகங்கள்வழி அவற்றை விளம்பரம் செய்து பலரது கவனத்தை ஈர்த்தும் உள்ளார் இவர்.
தற்போது 'நெட்ஸ் ஃபிளாஷ்பே' அட்டையில் நடிகர்களின் ஓவியங்களைப் பதித்து வருகிறார். இந்த முயற்சியில் தன் குடும்பத்தாரின் ஆதரவு பெரிதும் கைகொடுத்ததாகக் கூறுகிறார் பிரீத்திக்கா.
"இது வெறும் வர்த்தகம் மட்டுமல்ல. என் படைப்புகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மனநிறைவே, இந்த முயற்சியைத் தொடரப் பெரும் ஊக்குவிப்பாக அமைகிறது. எனது வரைகலைத் திறன் ஒருவர் வாழ்க்கையில் சிறியதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று நினைக்கும்போது அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறுகிறார் பிரீத்திக்கா.
இவர் படைப்புகளை இன்ஸ்டகிராமில் '@eeia.pq' இணைப்புவழி காணலாம்.
பண்டிகைக்கால வாழ்த்து அட்டைகள், பணப் பைகள், புகைப்படங்கள் என்று வடிவமைத்துக்கொண்டிருந்த இவர், வரும் டிசம்பர் மாதம் திருமணமாகவுள்ள தன் தோழி நமீரா கேட்டுக்கொண்டதால் அவரின் திருமண அழைப்பிதழையும் மின்னிலக்க முறையில் வடிவமைக்கிறாராம்.
இது குறித்து பேசிய நமீரா, "பிரீத்திக்கா ஒவ்வொரு படத்திலும் தன் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு மிக நுணுக்கமாக வரைவதை நான் பார்த்திருக்கிறேன். என் திருமண அழைப்பிதழை வடிவமைக்க இவரைவிட யாராலும் சிறப்பாகச் செய்ய முடியாது. நான் நினைத்தது போலவே, சிறந்த முறையில் என் அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்," என்றார்.
இந்தியர்கள் மட்டுமன்றி வேற்று இனத்தவரையும் தம் படைப்புகளால் ஈர்க்க வேண்டும் என்பதே பிரீத்திக்காவின் கனவாகும்.