இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் அமைப்பு, 200க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் உதவியோடு தீபாவளியை முன்னிட்டு 10,000 சமோசாக்களையும் 2000 பீட்ஸாக்களையும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகம் செய்துள்ளது. பீட்ஸா ஹட், அல்ட் பீட்ஸா ஆகிய பீஸா நிறுவனங்கள் இம்முயற்சிக்கு பீட்ஸாக்களை தாராளமாக வழங்கியுள்ளன.
கோர்மெ ரெடி, எல்ஜிடி வங்கியும் அவற்றின் ஆதரவை இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்சுக்குக் கொடுத்தன.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு கட்டட வேலையிடங்களில் பணியாற்றும் 15,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சாலை வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் தொண்டூழியர்கள் தங்களின் வாகனங்களில் சமோசாக்களையும் பீட்ஸாக்களையும் கொண்டு சென்றனர்.
இந்த விநியோக முயற்சியில் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் திரு ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதோடு அவரும் தொண்டூழியர்களைப் போல் வாகனத்தை சொந்தமாக ஓட்டி, உணவை எடுத்துக்கொண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகம் செய்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் இந்த விநியோக முயற்சியின் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் கடுமையாக உழைப்பதற்கு தொண்டூழியர்கள் நன்றி தெரிவிப்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைவதோடு இரு தரப்புக்கும் நல்லுறவு உருவாக வாய்ப்பமைகிறது.
தொண்டூழியர்கள் இந்த முயற்சிக்கு இரண்டு மாதங்களாக மும்முரமாக ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறினார் இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் தொண்டூழிய அமைப்பை நிறுவிய தீபா சுவாமிநாதன். உணவைக் கொடுத்தபோது வெளிநாட்டு ஊழியர்களின் முகம் மலர்வதைக் கண்டு அளவில்லா ஆனந்தம் கிடைத்ததோடு இந்த அனுபவம் தங்களின் மனதை உருகச் செய்ததென்று தொண்டூழியர்கள் தெரிவித்தனர்.
“இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் சிறு சிறு வழிகளில் சமுதாயத்திற்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க விரும்புகிறது. அவ்விதத்தில்தான் இந்த தீபாவளி விநியோக முயற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. தொண்டூழியர்களுக்கு இம்மாதிரியான அனுபவங்களின் வாயிலாகத் தொடர்ந்து இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர்களுக்குத் தேவையான உதவியையும் செய்ய உழைத்துக்கொண்டே இருக்கும்,” என்றார் தீபா சுவாமிநாதன்.