சிங்கப்பூரில் 1819ல் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சேலை எவ்வாறு திருப்பு முனையாக இருந்தது என்பதையும் நஞ்சுபோல கசந்த 15ஆம் நூற்றாண்டு மலாக்காவின் அரசக் களத்தின் சதிகளையும் எடுத்துரைக்கும் இரண்டு உள்ளூர் திரைப்படங்கள் வரும் நவம்பர் 12, 13ஆம் தேதிகளில் திரையிடப்படவுள்ளன.
வரலாறு, இலக்கியம், கலாசாரம் போன்றவை பின்னிப் பிணைந்துள்ள அவ்விரு திரைப்படங்களை சிங்கப்பூர் இந்திய நாடக மற்றும் குறும்படம் ஆர்வலர்கள் (சிட்ஃபி), திரையிடவுள்ளனர்.
கார்னிவல் திரையரங்கில் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை 13ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் படங்கள் திரையிடப்படும். இப்படங்களைக் காண்பதற்கு பொதுமக்கள் https://sitfe.sg/campaign/ என்னும் இணையப்பக்கத்தை நாடி நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
சிங்கப்பூரின் முன்னோடி எழுத்தாளரான புதுமைதாசன் என்னும் பி.கிருஷ்ணன் 1960களில் வானொலி நாடகமாக எழுதிய ‘நச்சுக்கோப்பை’, முதல் முறையாக ஒரு முழு நீளத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இவ்வாண்டு தமது 90வது பிறந்தநாளைக் கொண்டாடும் புதுமைதாசனுக்கு, இத்திரைப்பட வெளியீடு ஒரு சமர்ப்பணமாக விளங்கும் என நம்புகிறார் அவற்றின் இயக்குநர், சலீம் ஹாடி.
15ஆம் நூற்றாண்டு மலாக்காவின் அரசியலைச் சித்திரிக்கும் நச்சுக்கோப்பை திரைப்படத்தை அங்குசென்று படம்பிடிக்கவில்லை என்றாலும், அக்காலகட்டத்தின் சூழலை பிரதிபலிக்க அதிக முயற்சிகளை எடுத்துக்கொண்டதாக சிட்ஃபி கூறியது.
உதாரணத்திற்கு மலாய் கலாசாரத்தைச் சித்திரிக்க, ஸ்ரீ வாரிசன் கலைக் குழுவைச் சேர்ந்த நடனமணிகளும், சீலாட் பயிற்றுவிப்பாளரான பமாத்தும் இப்படத்தில் பணியாற்றுமாறு அழைக்கப்பட்டனர்.
அத்துடன், பிரபல மலாய் ஆடை வடிவமைப்பாளரான அனுவர் சரண் ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
‘ஜென்பனொ’ என்ற மலாய் இசைக்குழு திரைப்படத்தின் முகப்புப் பாடலுக்கும் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணி இசையையும் அமைத்துள்ளது.
இவ்வாறு பல இனங்களை இணைக்கும் முயற்சியாக ‘நச்சுக்கோப்பை’ அமைந்துள்ளது.
‘நச்சுக்கோப்பை’, சுயதொழில் செய்வோருக்கான தேசிய கலைகள் மன்றத்தின் மானியத்தைப் பெற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வளர்தமிழ் இயக்கம் ஆகியவற்றின் ஆதரவாலும் எடுக்கப்பட்டது.
‘சிட்ஃபி’ குழுவினர் 2018ஆம் ஆண்டில் மேடையேற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை நாடகத்தில் நடித்த பிறகு, இரண்டாம் முறையாக அவர்களோடு இணைந்து நச்சுக்கோப்பையில் இவ்வாண்டு நடித்துள்ளார் ரகுவரன் நாயுடு,38.
“முந்தைய நூற்றாண்டுகளை சித்திரிக்கும் நாடகங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், இத்திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியபோது உற்சாகம் அடைந்தேன். புது அனுபவங்களுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்,” என்றார் திரு ரகு. இவர் வசந்தம் ஒளிவழியில் பல்வேறு நாடகங்களில் நடிப்பதோடு அவாண்ட் நாடகக் குழுவின் ‘சிவகாமி’ நாடகத்திலும் நடித்துள்ளார்.
‘சிட்ஃபி’ குழுவினர் ஆய்வுசெய்து திரைக்கதை எழுதி தயாரித்தப் படம்தான் ‘நூல் கதைகள்’.
சேலை சிங்கப்பூருக்கு எவ்வாறு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சேலை 1819ஆம் ஆண்டு முதல் எவ்வாறு ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியப் பங்காற்றியது என்றும் கூறுகிறது, ‘நூல் கதைகள்’.
“இதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, ஜப்பானியர்களின் ஆட்சியில், இந்தியர்கள் மென்மையான சேலைகளைக் கவசமாக பயன்படுத்தி சீனர்களின் பிள்ளைகளை பாதுகாத்ததைத் தெரிந்துகொண்டபோது ஆச்சரியம் ஏற்பட்டது,” என்றார் இயக்குநர் சலீம்.
இத்திரைப்படம் 2019ஆம் ஆண்டில் நாடக படைப்பாக அரங்கேறியது. படத்தின் கதாநாயகியாக நடித்த த. பிரியதரிசினி, 32, இப்படத்தில் கிராமத்து பாணியில் பேசியது சுவாரசியமாய் அமைந்ததாக பகிர்ந்துகொண்டார். மேலும், சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் சேலைகளால் உண்டான பிணைப்பு, இப்படத்தில் தம் மனத்தை நெகிழ வைத்த அம்சம் என்றார் அவர்.