புனித ரமலான் மாத நோன்பை ஒட்டி குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் 30,000 கிலோகிராம் அரிசியை சிங்கப்பூர் பௌத்த மடாலயம் (புத்திஸ்ட் லாட்ஜ்) ப’அல்வி பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
லூவிஸ் சாலையில் அமைந்துள்ள ப’அல்வி பள்ளிவாசலில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.
அதில் சிங்கப்பூர் பௌத்த மடாலயத்தின் தலைவர் டான் லீ ஹுவாக், ப’அல்வி பள்ளிவாச லின் இமாம் சையது ஹசான் அல்-அத்தாஸிடம் நன்கொடையை வழங்கினார்.
நன்கொடையாக பெறப்பட்ட அரிசி சிங்கப்பூர் முழுவதுமுள்ள வசதி குறைந்தோருக்கு வழங்கப்படும். சமூக அமைப்புகள், அடித்தள அமைப்புகள், பள்ளி வாசல்கள் ஆகியவற்றின் மூலம்நன்கொடை விநியோகிக்கப்படும்.
மேலும் பள்ளிவாசல்களில் ரமலான் மாதத்தில் தினந்தோறும் சமைக்கப்படும் நோன்புக் கஞ்சிக்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் அரிசியில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டு புனித ரமலான் மாதத்தின்போது சிங்கப்பூர் பௌத்த மடாலயம் அரிசியை நன்கொடையாக வழங்கி வருகிறது.
இதுவரை மொத்தம் ஏறத்தாழ 360,000 கிலோவிற்கும் மேலான அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக நன்கொடை விநியோகத் திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
“வசதி குறைந்தவர்களும் எவ்விதப் பாகுபாடுமின்றி விழாக் காலத்தை மகிழ்வுடன் கொண்டாட உதவும் நோக்கிலேயே இத்திட்டம் ஒவ்வோர் ஆண்டும் செயல்பட்டு வருகிறது,” என்று கூறினார் ப’அல்வி பள்ளிவாச லின் இமாம் சையது ஹசான் அல்-அத்தாஸ்.
மேலும் கூடுதலாக 40,000 கிலோ பேரீச்சம்பழமும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவிலிருந்து இந்நன்கொடை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இன, சமயப் பாகுபாடின்றி வசதிகுறைந்த பொதுமக்களுக்கு இந்நன்கொடை சென்று சேர ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஒன்றிணைந்து இந்த நன்கொடை விநியோக நடவடிக்கைகளை மேற்கொள் கிறோம்,” என்று நன்கொடை விநியோகத் திட்டத்தின் தலை வரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான முஹம்மது இர்ஷாத் கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் பாசிர் ரிஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷரெல் தாஹாவும் கலந்துகொண்டார்.
நன்கொடையாக அரிசியும் பேரீச்சம்பழமும் பெற விரும்பும் வசதிகுறைந்த பொதுமக்களும் நன்கொடை அளிக்க விரும்பும் இதர அமைப்புகளும் இத்திட்டத்தின் தொண்டூழியர் ஹாஜா மைதீனை 97862574 எனும் எண் ணில் தொடர்புகொள்ளலாம்.