சென்ற ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, கைத்தொலைபேசியைப் பார்த்தவாறே சாலையைக் கடக்க முயன்ற 52 வயது முகமது யுஸ்மான் சகாதன் கார் மோதி உயிரிழந்தார்.
சம்பவத்தன்று அல்ஜுனிட் சாலையில் போக்குவரத்துச் சமிக்ஞையில் 'சிவப்பு' எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்தபோது அவர் சாலையைக் கடந்தார்.
கைத்தொலைபேசியில் கவனமாக இருந்த யுஸ்மான், அருகில் நின்றிருந்த இருவர் சாலையைக் கடக்க முயன்றதால் அவர்களோடு சேர்ந்து தானும் சாலையைக் கடக்க முடிவெடுத்திருக்கக்கூடும் என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.
சாலையைக் கடக்கும்போது அவர் கைத்தொலைபேசியில் இருந்து கண்களை அகற்றவில்லை. நிமிர்ந்து பார்க்காமலே அவர் சாலையைக் கடந்தது அந்த வட்டாரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவின் மூலம் தெரியவந்தது.
போக்குவரத்துச் சமிக்ஞைகளில் காத்திருக்கும் நேரத்தில் கைத்தொலைபேசியைப் பார்த்தவாறே சாலையைக் கடக்கும் போக்கு பொதுவாகக் காணப்படுவதைச் சுட்டிய மரண விசாரணை அதிகாரி ஆடம் நக்கோடா, இது ஆபத்தானது என்று வலியுறுத்தப்பட வேண்டும் என்றார்.
சாலையைக் கடக்கும் பாதசாரிகள் கைத்தொலைபேசியில் இருந்து கவனத்தைத் திருப்பி சாலையில் எதிர்வரும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்த பிறகே சாலையைக் கடக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

