பிரதமர் லீ: ஆசியாவைப் பசுமையாக்க ஜப்பானின் தலைமைத்துவத்தை சிங்கப்பூர் வரவேற்கிறது

பிரதமர் லீ: ஆசியாவைப் பசுமையாக்க ஜப்பானின் தலைமைத்துவத்தை சிங்கப்பூர் வரவேற்கிறது

2 mins read
ec1e5cc1-83fc-44df-a25d-32993ab213a4
ஏஸெக் சந்திப்பில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (இடது), ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கி‌ஷிடா. - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
Google News Preferred Icon

தனது அரசதந்திர நடவடிக்கைகளில் நீடித்த நிலைத்தன்மை அம்சத்தை ஜப்பான் உள்ளடக்குவதற்கு சிங்கப்பூர் முழு ஆதரவு வழங்குவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு லீ திங்கட்கிழமையன்று இவ்வாறு சொன்னார்.

தமது பயணத்தின் இறுதியில் சிங்கப்பூர் செய்தியாளர்களுடன் பிரதமர் பேசினார். ஜப்பான் தலைமையிலான ‘கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத சமூகம்’ (ஏஸெக்) திட்டம், பசுமை விவகாரங்களில் ஜப்பான் எந்த நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறது என்பதை முன்வைக்கிறது என்றார் அவர்.

கரிமப் பயன்பாட்டை ஒழிக்கும் முயற்சிகள் எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்க முடியாது என்பதே ஏஸெக்கின் அடிப்படை அம்சம். ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ற தனிப்பட்ட வழிமுறைகளை உருவாக்கி கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஊக்குவிப்பது அத்திட்டத்தின் இலக்கு.

“மியன்மாரைத் தவிர அனைத்து தென்கிழக்காசிய நாடுகளும் ஏஸெக்கில் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவும் அதில் உள்ளது. அப்படியென்றால் தனது அரசதந்திர நடவடிக்கைகளின் அங்கமாக பசுமை, நீடித்த நிலைத்தன்மை விவகாரங்களில் ஜப்பான் ஒத்துழைக்க விரும்பும் நாடுகளை திட்டம் முன்வைப்பதாகும். அதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம்,” என்று திரு லீ குறிப்பிட்டார். நீடித்த நிலைத்தன்மைக்கான எரிசக்தி உள்கட்டமைப்பு, அதற்கான நிதி உள்ளிட்ட அம்சங்கள் ஏஸெக் திட்டத்தில் அடங்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் அடைய இத்தகைய அம்சங்களைக் கருத்தில்கொள்ளவேண்டும்,” என்று பிரதமர் லீ சுட்டினார்.

“இது மிகப் பெரிய சவாலாக இருக்கும், எளிதான ஒன்று அல்ல. இதற்கு இன்னும் செயல்பாடுகள் உள்ளன. ஆனால் ஓர் இலக்கை நிர்ணயித்துவிட்டோம். அதை அடைய நம்மால் முடிந்த முயற்சியை மேற்கொள்வோம்,” என்றும் அவர் விளக்கினார்.

ஜப்பான்-ஆசியான் உறவுகளின் 50 ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வண்ணம் தென்கிழக்காசிய நாட்டுத் தலைவர்கள் தோக்கியாவில் மூன்று நாள்களுக்கு ஒன்றுகூடினர். அந்நிகழ்வின் கடைசி நாளான திங்கட்கிழமையன்று ஏஸெக் திட்டத்தில் இடம்பெறும் நாடுகளின் தலைவர்கள் முதன்முறையாக சந்திப்பு நடத்தினர்.

டிசம்பர் 12ஆம் தேதியன்று துபாயில் ‘காப்28’ பருவநிலை மாநாடு நிறைவடைந்தது. படிம எரிபொருள் பயன்பாட்டைக் கைவிடுவதன் முக்கியவத்துவம் அம்மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது; அதன் மூலம் ‘காப்28’ உலகிற்கு சரியான பாதையை அமைத்துத் தந்துள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.

புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி உள்ளிட்டவற்றை உருவாக்கி உலகம் படிம எரிபொருளை நம்பியிருப்பதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரை அந்த மாநாட்டில் தெளிவாக முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஜப்பான்உலகம்நீடித்த நிலைத்தன்மைபருவநிலைசுற்றுச்சூழல்